70 ஆண்டுகள் பதவியில் இருந்த தாய்லாந்து நாட்டின் மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் மரணம் அடைந்தார். அவருடைய மறைவுக்கு ஒரு வருடம் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து நாட்டின் மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் (88). தனது 18 வயதில், 1946–ம் ஆண்டு, மன்னர் பதவியை ஏற்றார். தொடர்ந்து, 70 ஆண்டு காலம் மன்னராக இருந்து, மக்களின் ஏகோபித்த அபிமானத்தையும், அன்பையும் பெற்று ஆட்சி நடத்தி வந்தார். அவரை பார்த்த மக்கள், நாட்டை ஒற்றுமைப்படுத்தும் சக்தியாக நம்பினர்.
கடந்த சில ஆண்டுகளாக அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல், சிகிச்சையில் இருந்து வந்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன், உடல் நலக்குறைவால் 2014–ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 3ம் தேதி பாங்காக்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த 9ம் தேதி, அவருக்கு திடீரென உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதை அறிந்ததும், அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனை முன் திரண்ட மக்கள், அவருககாக கண்ணீரோடு பிரார்த்தனை செய்து வந்தனர்.
இந்நிலையில் மன்னர் பூமிபால் அதுல்யதேஜ், சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் மரணம் அடைந்தார். அப்போது பட்டத்து இளவரசர் மகா வஜிரலோங்கோன், இளவரசி மகாசாக்ரி சிறிந்தோன், இளவரசி சோம்சவாலி, இளவரசி சுலாபோன் ஆகியோர் உடன் இருந்தனர்.
உலகிலேயே நீண்ட காலம் மன்னராக இருந்தவர், தாய்லாந்து மன்னர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் மறைவு, மக்களை மீளாத்துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. மன்னரது படங்களை கையில் ஏந்தி, மக்கள் கதறி அழுகின்றனர்.
மன்னரின் மறைவுக்கு நாடு ஒரு ஆண்டுக்கு துக்கம் கடைப்பிடிக்கும் என பிரதமர் பிரயுத் சான் ஓச்சா அறிவித்தார்.
இதுபற்றி அவர் அறிக்கையில் கூறுகையில், , ‘‘மன்னர் இப்போது சொர்க்கத்தில் இருக்கிறார். அவர் அங்கிருந்தவாறு தாய்லாந்து மக்களை பார்த்துக்கொள்வார்’’ என கூறப்பட்டுள்ளது.
63 வயதான பட்டத்து இளவரசர் மகா வஜிரலோங்கோன், நாட்டின் புதிய மன்னர் ஆவார் என பிரதமர் பிரயுத் சான் ஓச்சா தெரிவித்தார். ராணி சிரிகிட் 2012–ம் ஆண்டு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அதில் இருந்து அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை.
மன்னர் பூமிபால் அதுல்யதேஜ்– சிரிகிட் தம்பதியருக்கு ஒரு மகன், 3 மகள்கள் உள்ளனர்.
