ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் - பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 10 போலீசார் பலி
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் அருகே சல்மா டேம் சாஸ்ட் எனும் மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடியில் போலீசார் இன்று வழக்கம் போல பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பயங்கர ஆயுதங்களுடன் காரில் வந்த தாலிபான் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் சோதனைச் சாவடி மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
நாலாபுறமும் துப்பாக்கி குண்டுகள் சீறிப்பாய்ந்ததாலும், வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறியதாலும் அப்பகுதியே போர்க் களம் போல காட்சியளித்தது. சுதாரித்துக் கொண்ட போலீசாரும் தீவிரவாதிகள் மீது பதில் தாக்குதல் நடத்தினர்.
பல மணி நேரம் நீடித்த இச்சண்டையில் 10 போலீசார் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தப்படலாம் என்று சந்தேகிக்கப்படுவதால் அப்பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் கடந்த 22 ஆம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 போலீசார் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.