srilanka president agree of army war crime
இலங்கையில் இறுதிக்கட்ட போரின்போது தமிழர்களை கொன்று குவித்த ராணுவ வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா உறுதியளித்துள்ளார்.
இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரில், 40,000க்கும் மேற்பட்டோர் இலங்கை ராணுவத்தால் கொன்று குவிக்கப்பட்டதாக ஐநா புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச நீதிவிசாரணை தேவை ஐநாவில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இலங்கை ராணுவத்தினருக்கு ஆதரவாக இதுவரை பேசிவந்த அந்நாட்டு அதிபர் சிறிசேனா, முதன்முறையாக போர்க்குற்றம் தொடர்பாக இலங்கை ராணுவத்துக்கு எதிராக பகிரங்கமாக பேசியுள்ளார்.
இலங்கை இறுதிக்கட்ட போர் குறித்து பேசிய சிறிசேனா, இலங்கையில், விடுதலை புலிகளுக்கு எதிராக 2009ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரின் போது தமிழர்களை கொன்று குவித்த ராணுவ வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அப்போதைய ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக சில ராணுவ வீரர்கள் போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர். அதை மனசாட்சியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
போரில் நாட்டுக்காக சண்டையிட்ட வீரர்களை ஆளும் கட்சி வேட்டையாடி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. ஆனால் இந்த குற்றச்சாட்டை ஏற்கமாட்டேன். தன் மீதுள்ள கறையை ராணுவம் அகற்ற வேண்டிய நேரம் இது. ராணுவத்தின் கட்டுப்பாட்டை மீறி சில அத்துமீறிய விஷயங்கள் நடந்துள்ளன. அவை ஜனநாயகத்திற்கும் மக்களின் சுதந்திரத்திற்கும் எதிரானதும் சட்டவிரோதமானதும்கூட என்று சிறிசேனா தெரிவித்தார்.
மேலும் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை நடைபெற்றுவருவதாகவும் போர்க்குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் நிரபராதிகள் என தெரியவந்தால் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் எனவும் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா உறுதியளித்துள்ளார்.
