சிங்கப்பூரில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. அதிபர் ஹலிமா, பிரதமர் லீ வாக்களித்தனர். ஏராளமான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்குப் பதிவு செய்து வருகின்றனர். 

சிங்கப்பூர் அதிபர் Halimah binti Yacob பதவிக்காலம் முடிவடைவதையொட்டி, அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2023 சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் GIC நிறுவனத்தின் முன்னாள் தலைமை அதிகாரி இங் கொக் சொங் (Ng Kok Song), முன்னாள் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் மற்றும், NTUC Income நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி டான் கின் லியென் (Tan Kin Lian) ஆகியோர் போட்டியிடுகின்றனர்

பிரச்சாரங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இன்று காலை முதல் வாக்குபதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 8.45 மணியளவில், அதிபர் ஹலிமா யாக்கோப் தமது கணவர் முகமது அப்துல்லா அல்ஹஃப்ஷியுடன், சுங் செங் உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் மக்களோடு மக்களாக நின்று வாக்களித்தார்.

அதேபோல், பிரதமர் லீ சியன் லூங், தமது மனைவி ஹோ சிங்குடன் வந்து, கிரசெண்ட் பெண்கள் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.



அதிபர் தேர்தல் வேட்பாளரான டான் கின் லியான், அவரும் அரவது மனைவி டே சியூ ஹோங் இருவரும் இயோ சூ காங்கில் உள்ள ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு மையத்தில் வாக்களித்தனர்.

சிங்கப்பூர் அதிபர் தேர்தல் 2023 : வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!