தலிபான் பயங்கரவாத இயக்கத்தின் புதிய தலைவனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஹைபதுல்லா அகுந்த்ஜாதா, பாகிஸ்தானில் உள்ள மத கல்வி நிலையத்தில், 15 ஆண்டுகள், ஆசிரியராக வேலை பார்த்தது, தற்போது தெரியவந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் தலிபான் பயங்கரவாத இயக்கத்துக்கு எதிராக, அமெரிக்கா - ஆப்கன் படைகள் போர் தொடுத்து வருகின்றன. பாகிஸ்தானில் பதுங்கி இருந்த, தலிபான் அமைப்பின் தலைவன் மன்சூர்அக்தர், அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்டார்.

தலிபான் அமைப்பின் புதிய தலைவனாக, ஹைபதுல்லா அகுந்த்ஜாதா தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், பாகிஸ்தானில், 15 ஆண்டுகள், ஆசிரியராக வேலை பார்த்தது, தற்போது அம்பலமாகி உள்ளது.

இதுதொடர்பாக, பலூசிஸ்தான் மாகாணத்தின் குலச்சா பகுதியில் உள்ள, அல்காஜ் மத கல்வி நிலையத்தின் நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

அக்குன்சாதா, எங்கள் கல்வி நிலையத்தில், ரூ.6 ஆயிரம் சம்பளத்துக்கு வேலை பார்த்தார். மிகத் திறமையான ஆசிரியர். ஆனால், தலிபான் அமைப்புக்கு அவர் தலைவராக போகிறார் என்று சிறிதும் நினைக்கவில்லை.

தலைவராக பொறுப்பேற்பதற்கு சில நாட்களுக்கு முன், பணியில் இருந்து விலகிவிட்டார் என கூறினார்.

இந்நிலையில், லட்சக்கணக்கான ஆப்கன் அகதிகள், பலூசிஸ்தானில் உள்ளதால், அவர்களில் யார் என்ன வேலை செய்கிறார்கள் என்பதை யாராலும் கவனிக்க முடியாது என, பலூசிஸ்தான் மாகாண உள்துறை அமைச்சர் புக்தி கூறியுள்ளார்.