அமெரிக்கா செல்வதற்கு, பாகிஸ்தான் , பிரதமர் இம்ரான் கானுக்கு அளித்த விமானத்தை, சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர், அதை பாதியிலேயே திரும்பப் பெற்றார். இதனால் இம்ரான்கான் அவமானப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐ.நா., பொது சபை கூட்டம் கடந்த மாதம் நடந்தது. இதில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பங்கேற்றார். அமெரிக்கா செல்வதற்கு முன் அவர் வளைகுடா நாடான சவுதி அரேபியாவுக்கு சென்றிருந்தார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அங்கிருந்து வர்த்தக விமானத்தில், சவுதி அரேபியா செல்ல திட்டமிட்டு இருந்தார். அப்போது, சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், தன் விமானத்தை பயன்படுத்திக் கொள்ளும்படி கூறினார்.

அதன்படி, பட்டத்து இளவரசரின் சிறப்பு விமானத்தில் இம்ரான் கான், நியூயார்க் சென்றார். அங்கிருந்து பாகிஸ்தான் திரும்புவதற்கு அவர் தயாராக இருந்தபோது, விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. 

அதனால், வர்த்தக விமானத்தில், இம்ரான் நாடு திரும்பினார். இந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாறு ஏதும் ஏற்படவில்லை. இம்ரான் மீதான அதிருப்தியாலேயே, பட்டத்து இளவரசர், விமானத்தை திரும்பப் பெற்றதாக, செய்திகள் வெளியாகி உள்ளன.

இது குறித்து, பாகிஸ்தானில் இருந்து வெளிவரும், 'பிரைடே வீக்லி' என்ற ஆங்கில நாளிதழில் வெளியாகி உள்ள செய்தியில் , நியூயார்க் நகரில் நடந்த கூட்டங்களின் போது, துருக்கி அதிபர் ரிசப் தயீப் எர்டாகன் மற்றும் மலேஷிய பிரதமர் மகாதீர் முகமது ஆகியோருடன் இணைந்து, 'இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு' உருவாக்கப்படும் என, இம்ரான் அறிவித்தார்.

இதைத் தவிர, அமெரிக்கா - ஈரான் இடையேயான பிரச்னையில், ஈரானுடன் பேச்சு நடத்த, இம்ரான் முயற்சித்தார். ஈரானுக்கும், சவுதி அரேபியாவுக்கும் இடையே பிரச்னைகள் தீவிரமாக இருக்கும் நிலையில், இம்ரானின் இந்த நடவடிக்கைகள், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு அதிருப்தியை ஏற்படுத்தின. 

அதனால், இம்ரான்கானை அவமானப்படுத்தும் வகையில், சல்மான் விமானத்தை திரும்பப் பெற்றதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பாகிஸ்தான் இந்த செய்திக்கு மறுப்பு வெளியிட்டுள்ளது.