- Home
- உலகம்
- அமெரிக்க - இஸ்ரேல் போருக்கு நடுவே சிக்கிய 36 இந்தியக் கப்பல்கள் - மிரண்டு தவிக்கும் உலக நாடுகள்..!
அமெரிக்க - இஸ்ரேல் போருக்கு நடுவே சிக்கிய 36 இந்தியக் கப்பல்கள் - மிரண்டு தவிக்கும் உலக நாடுகள்..!
இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல்கள் விரைவில் இந்தப் பகுதிக்கு விரைந்து, இந்தியக் கொடி ஏந்திய கப்பல்களைப் பாதுகாப்பாகத் தாயகம் அழைத்து வரும் என்பதே ஒட்டுமொத்த தேசத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சிக்கிய கப்பல்கள்- மாலுமிகளின் நிலை
உலகமே போரின் விளிம்பில் நிற்கும்போது, உலக வர்த்தகத்தின் இதயத் துடிப்பான ஹார்முஸ் ஜலசந்தி ஒரு மரணப் பொறியாக மாறியிருக்கிறது. அமெரிக்காவும் - இஸ்ரேலும் ஒருபுறம், ஈரான் மறுபுறம் என மோதிக்கொள்ளும் இந்த 'நெருப்பு ஆற்றில்', சிக்கித் தவிக்கும் 36 இந்தியக் கப்பல்களை மீட்க இந்தியா தனது இரும்புக்கரம் கொண்ட கடற்படையை ஏவத் தயாராகிவிட்டது. இது வெறும் மீட்புப் பணியல்ல, இந்தியாவின் சர்வதேச அதிகாரத்தை நிலைநாட்டும் அதிரடி ஆட்டம்
பதற்றமான சூழலில், இந்தியக் கொடியுடன் கூடிய 36 வணிகக் கப்பல்கள் சிக்கித் தவிப்பது இந்திய அரசுக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பாரசீக வளைகுடாவிற்கும் ஓமன் வளைகுடாவிற்கும் இடைப்பட்ட இந்தச் சிறிய கடல் பகுதியில் சிக்கியுள்ள 36 கப்பல்களில், அரசுக்குச் சொந்தமான இந்திய கப்பல் போக்குவரத்துக் கழகத்தின் (Shipping Corporation of India) கப்பல்களும் அடங்கும். சுமார் ஆயிரக்கணக்கான இந்திய மாலுமிகள் இந்தப் பகுதியில் பணியில் உள்ளனர். தற்போதைய நிலவரப்படி, இந்தக் கப்பல்களில் அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு இல்லை என்றாலும், ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ட்ரோன் தாக்குதல்கள் மற்றும் ஈரானின் கடற்படை கெடுபிடிகள் காரணமாக மாலுமிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கை
ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் இந்தியக் கப்பல்களைப் பாதுகாப்பாக அழைத்து வர இந்திய கடற்படையின் போர்க்கப்பல்களை அனுப்பும் முடிவை மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. 2019 ஜூன் மாதத்தில் இதே போன்ற சூழல் நிலவியபோது, இந்தியா ஆபரேஷன் சங்கல்ப் என்ற திட்டத்தைத் தொடங்கியது.
அப்போது ஐஎன்எஸ் தல்வார் போன்ற அதிநவீன போர்க்கப்பல்கள் அங்கேயே முகாமிட்டு, தினமும் சராசரியாக 16 கப்பல்களைப் பாதுகாப்பாக அழைத்து வந்தன.தற்போது சிக்கியுள்ள கப்பல்கள் இந்திய அதிகாரிகளுடன் நிமிடத்திற்கு நிமிடம் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற கடுமையான 'செக்யூரிட்டி புரோட்டோகால்' அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஈரான் - இந்தியா இடையிலான ரகசிய ஒப்பந்தம்?
ஈரான் தனது ஜலசந்தியை மேற்கத்திய நாடுகளுக்கு மூடுவதாக அறிவித்திருந்தாலும், இந்தியாவிடம் ஒரு மென்மையான போக்கையே கடைப்பிடிக்கிறது. புதுடெல்லியில் நடந்த 'ரைசினா பேச்சுவார்த்தையில்' ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் சயீத் கதிப்சாதே, ஜலசந்தி மூடப்படவில்லை என்று உறுதியளித்துள்ளார்.
அதற்கும் மேலாக, பாரசீக வளைகுடாவில் உள்ள தனது அண்டை நாடுகளையோ அல்லது நட்பு நாடுகளையோ (இந்தியா உட்பட) இலக்காகக் கொள்ள மாட்டோம் என்று ஈரான் ரகசியமாக உறுதியளித்துள்ளது. இந்த ராஜதந்திர உறவுதான் தற்போது சிக்கியுள்ள 36 கப்பல்களுக்கும் ஒரு சிறு நம்பிக்கைக் கீற்றாக உள்ளது.
ஏன் இந்த ஜலசந்தி இந்தியாவுக்கு முக்கியம்?
உலக எண்ணெய் வர்த்தகத்தில் சுமார் 20% இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் நடைபெறுகிறது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் கச்சா எண்ணெய் மற்றும் எல்என்ஜி எரிவாயுவில் கணிசமான பகுதி இந்த வழியாகவே வருகிறது. இப்பகுதி மூடப்பட்டால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை விண்ணைத் தொடும். பொருளாதாரத் தேக்கம் ஏற்படும் சர்வதேச அளவில் இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும்.
இந்திய கடற்படை ஏற்கனவே சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்தும், செங்கடல் பகுதியில் ஹவுதி தாக்குதல்களில் இருந்தும் இந்தியக் கப்பல்களைத் திறம்படப் பாதுகாத்து வருகிறது. அந்த அனுபவம் இப்போது ஹார்முஸ் ஜலசந்தியில் கைகொடுக்கும். அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையிலான இந்த முக்கோணப் போரில், தனது பொருளாதார நலன்களையும், குடிமக்களின் உயிரையும் காக்க இந்தியா ஒரு 'நிபுணத்துவமான' கயிற்றின் மேல் நடக்கும் வித்தையைச் செய்ய வேண்டியுள்ளது.
இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல்கள் விரைவில் இந்தப் பகுதிக்கு விரைந்து, இந்தியக் கொடி ஏந்திய கப்பல்களைப் பாதுகாப்பாகத் தாயகம் அழைத்து வரும் என்பதே ஒட்டுமொத்த தேசத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.
