அமெரிக்காவில் ஓடுபாதையில் நின்று கொண்டிருந்த விமானம் அருகே பயணி ஒருவரின் செல்போன் திடீரென தீப்பற்றியது. இதனால் அருகில் இருந்த பயணிகள் பதற்றம் அடைந்தனர்.

சௌத்வெஸ்ட் ஏர்லைன்சின் 994 போயிங் விமானம், பால்டிமோருக்கு புறப்பட தயாராக இருந்தது. அப்போது அந்த விமானத்தின் அருகில் விமான பயணிகள் வந்து கொண்டிருந்தனர். திடீரென ஒரு விமானி கொண்டு வந்திருந்த சாம்சங் நோட் 7 வகை செல்போன் வெடித்துள்ளது. 

இதனால் அருகில் நின்றிருந்த மற்ற பயணிகள் அனைவரும் அச்சமடைந்தனர். இதனை அடுத்து, பால்டிமோருக்கு செல்லவிருந்த விமானம் ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டு, அதில் இருந்த பயணிகள் அனைவரும் உடனே இறக்கிவிடப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து விமான நிலைய போலீசார் விசாரித்ததில், பயணி ஒருவர் கொண்டு வந்திருந்த சாம்சங் நோட் 7 போன் வெடித்ததாக அவர்கள் உறுதி செய்தனர்.

இதேபோல், கடந்த மாதம் சிங்கப்பூரில் இருந்து பெங்களூரு சென்ற விமானத்தில் பயணி ஒருவர் வைத்திருந்த சாம்சங் வகை செல்போன் ஒன்று வெடித்தது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் நோட் 7 செல்போனில் பேட்டரி கறைபாடு காரணமாக 2 மில்லியனுக்கும் மேற்பட்ட இந்த வகை செல்பேன்களை திரும்பப் பெறுவதாக ஸ்மார்ட்போன் நிறுவனம் அறிவித்திருந்தது.