Asianet News TamilAsianet News Tamil

இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு - மக்கள் ஏற்றார்களா இவரை?

இலங்கையின் அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். 223 வாக்குகளில் 134 வாக்குகள் பெற்றார். ரணிலுக்கு எதிராக அதிபர் அலுவகம் முன்பு போராட்டக்காரர்கள் குவிந்து போராட்டத்தை மீண்டும் துவக்கியுள்ளனர்.

 ranil wickremesinghe elected as Sri Lanka President
Author
First Published Jul 20, 2022, 12:48 PM IST

இலங்கையின் அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். 223 வாக்குகளில் 134 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட டலஸ் அழகபெரும 83 வாக்குகளும், அனுரா திசநாயக்க 3 வாக்குகளும் பெற்று இருந்தனர். நான்கு வாக்குகள் செல்லாதவை. ரணிலுக்கு எதிராக மீண்டும் போராட்டம் நடந்து வருவதால் ஒரு வாரத்திற்கு பார்லிமென்ட் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஜிஜி பொன்னம்பலம், செல்வராஜ கஜேந்திரம் ஆகிய இரண்டு எம்பிக்கள் வாக்களிக்கவில்லை. தனது 89 வயதிலும் வாக்களிப்பதற்கு எம்பி ஆர். சம்பந்தன் வந்து இருந்தார். அவரை கைத்தாங்கலாக இருவர் பிடித்து வந்தனர். 

இலங்கை பார்லிமெண்டில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு இன்று நடந்தது. மொத்தம் உள்ள 225 எம்பிக்களில், 223 பேர் கலந்து கொண்டு வாக்களித்தனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியைச் சேர்ந்த எம்பி சமன்பிரியா ஹெராத் உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் குளுகோஸ் இறக்கப்பட்டுக் கொண்டு இருந்த நிலையில், அப்படியே பார்லிமென்ட் வந்திருந்து வாக்கு அளித்தார். அவருடன் கையில் குளுகோஸ் பாட்டிலும் கொண்டு வந்து இருந்தனர்.

இன்று தேர்வு செய்யப்பட்டு இருக்கும் அதிபர் ரணில் விக்ரமசிங்கே 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை பதவியில் நீடிப்பார். துவக்கத்தில் இருந்தே இவர் ரணில் விக்ரமசிங்கே வெற்றி பெறுவார் என்று கூறப்பட்டது. ஆளுங்கட்சியின் ஆதரவுடன் வெற்றி பெற்றுள்ளார். 

இந்தியப் பிரதமர் மோடி உதவ வேண்டும்; சஜித் பிரேமதாசா உருக்கமான வேண்டுகோள்!!

இலங்கை கடுமையான பொருளாதார வீழ்ச்சிக்கு தள்ளப்பட்டுள்ளது. அதிபர் கோத்தபய ராஜபக்சே கடந்த 13ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இவரை இடைக்கால அதிபராக தேர்வு செய்வதாக சபாநாயகருக்கு கோத்தபய ராஜபக்சே கடிதம் எழுதி இருந்தார். இதையடுத்து, ரணில் விக்ரமசிங்கே இடைக்கால அதிபரானார்.

இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராக போராட்டக்காரர்கள் போர்க் கொடி தூக்கினர். பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அவர் ராஜினாமா செய்த பின்னரும் அவரது வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்து எரித்தனர். இதன் பின்னரும் அவருக்கு இலங்கையில் கடுமையான எதிர்ப்பு இருந்தது. இந்த நிலையில்தான் எதிர்ப்பையும் மீறி அதிபராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். மக்களால் தேர்வு செய்யப்பட்ட  எம்பிக்கள் இவரை புதிய அதிபராக தேர்வு செய்து உள்ளனர். இவரை அதிபராக தேர்வு செய்யப்பட்டு இருப்பதை எதிர்த்து மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், அவர்கள் மீது அடக்குமுறை கையாள ரணில் உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.

நாளை முறைப்படி பார்லிமென்ட் வளாகத்தில் அதிபர் பதவி ஏற்பதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு சபாநாயகரை ரணில் கேட்டுக் கொண்டார். நாளை அனைத்துக் கட்சிகளுடனும் ஆலோசிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

ரணிலுக்கு எதிராக தற்போதும் போராட்டக்காரர்கள் அமைதியான வழியில் போராடி வருவதாக செய்தி வெளியாகி வருகிறது. இவர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்து இருப்பதால், விரைவில் புதிய பிரதமர் தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது. பிரதமருக்கான வாய்ப்பு சஜித் பிரேமதாசாவுக்கு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இலங்கை பொருளாதாரத்தை இவர் சீரமைப்பது பெரிய சவாலாகவே இருக்கும். ஒரு வார காலத்திற்கு பார்லிமென்ட் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பொருளாதார பேரழிவில் இருக்கும் இலங்கைக்கு, நடப்பு நிதியாண்டில் ஜனவரி முதல் ஏப்ரல் வரை நான்கு மாதங்களில் இந்தியா 3,000 கோடிக்கும் அதிகமான நிதியுதவியை அளித்துள்ளது. ஆனால், இலங்கையுடன் உறவு நெருக்கம் காட்டி வரும் சீனா இதே கால கட்டத்தில் வெறும் 542 கோடி மட்டுமே இலங்கைக்கு அளித்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios