பாகிஸ்தான் எல்லையில் நுழைந்து தீவிரவாதிகள் முகாம் மீது, இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதைதை தொடர்ந்து, கடும் ஆத்திரம் அடைந்துள்ள பாகிஸ்தான், இந்தியாவை பழிவாங்கும் நோக்கில் மிகப் பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக அந்நாட்டு அரசு, ரகசியமாக உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம், உரி ராணுவ முகாம் மீது, பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 19 ராணுவ வீரர்கள் இறந்தனர். இந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த பயங்கரவாத முகாம்கள் மீது, இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி அழித்தது.
இதனால், எல்லையில் ஊடுருவ முயற்சி, எல்லைக்கு அருகில் இருந்து துப்பாக்கி சூடு என, பல முயற்சிகளில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு பாகிஸ்தான் அரசும், ஐ.எஸ்.ஐ., உளவு அமைப்பும், ராணுவமும், ஆதரவும், ஊக்கமும் அளித்து வருகின்றன.
இந்நிலையில், பாகிஸ்தான் தரப்பில் இருந்து, தீவிரவாதிகளுக்கு பல்வேறு புதிய கட்டளைகள் பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக, இரு தரப்புக்கும் இடையே நடந்த பேச்சுக்களை, இந்திய உளவு அமைப்பு, ரகசியமாக கேட்டுள்ளது.
இதுகுறித்து, மத்திய உள்துறை அமைச்சக உயரதிகாரி ஒருவர் கூறியதாவது, தீவிரவாதிகளின் முகாம் மீது, இந்திய ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலால், பாகிஸ்தான் அரசு விரக்தியில் உள்ளது. இந்தியா – பாகிஸ்தான் எல்லையில், இந்திய படைகள் தீவிர கண்காணிப்பில் உள்ளது. ஊடுருவல் முயற்சிகளை தடுத்து வருவதால, பாகிஸ்தான் அரசுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
தீவிரவாதி பர்ஹான்வானி சுட்டு கொல்ல பட்ட பிறகு, ஜம்மு - காஷ்மீரில் நிலவி வந்த பதற்றமான சூழ்நிலை குறைந்து, இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்திய அரசுக்கு எதிராக நடந்து வந்த போராட்டங்களும் நீர்த்து போய்விட்டன.
காஷ்மீர் பிரிவினைவாத அமைப்பான ஹூரியத் அமைப்பும், அதன் மதிப்பை இழந்து வருவதாக, பாகிஸ்தான் கருதுகிறது.அதனால், இந்தியா மீது, குறிப்பாக, ஜம்மு - காஷ்மீரிலும், ராணுவ முகாம்கள் மீதும் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த வேண்டும் என, தீவிரவாத அமைப்புகளுக்கு, பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள் ளது.

இருதரப்புக்கும் இடையே நடந்த பேச்சுக்களில், பாகிஸ்தான் தரப்பின் விரக்தியும், பயங்கரவாதிகள் மீதான அதிருப்தியும் வெளிப்பட்டுள்ளது.இந்த பேச்சுக்கள் அடங்கிய, 'டேப்'களை, பாதுகாப்புப்படை மற்றும் உளவுப்பிரிவுகள் ஆராய்ந்து வருகின்றன.
இதைதொடர்ந்து, இந்தியாவில் பல்வேறு பண்டிகைகள், விழாக்கள் நடக்க உள்ள நிலையில், பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கும்படி, உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
அதேபோல், எல்லையிலும், ராணுவ முகாம்களில் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகளில் ஈடுபடும்படி, ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளுக்கு, ராணுவ அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியாவுக்குள் ஊடுருவி, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்தி வரும் தாக்குதல் சம்பவங்களுக்கு, சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அத்துடன், பாகிஸ்தானை தனிமைப்படுத்த, இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால், தற்போதுள்ள சூழ்நிலையில், 'அடக்கி வாசிக்கும்படி' அந்நாட்டு ராணுவத்துக்கு, பாகிஸ்தான் அரசு அறிவுறுத்தி இருந்தது.
இந்நிலையில், காஷ்மீரில் உள்ள தன் ஆதரவாளர்களிடமும், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளிடமும், பெரியளவில் தாக்குதல் நடத்தும்படி, பாகிஸ்தான் அரசு ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
