நிகரகுவா தேர்தலில் டேனியல் ஒர்டேகா 3வது முறையாக வெற்றி பெற்று அதிபர் ஆனார்.
மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான நிகரகுவாவில் நேற்று முன்தினம் அதிபர் தேர்தல் நடந்தது. இதில் தற்போதைய அதிபரும், முன்னாள் மார்க்சிஸ்ட் கொரில்லா தலைவருமான டேனியல் ஒர்டேகாவும் (70), வலதுசாரி பி.எல்.சி. கட்சியை சேர்ந்த மேக்சிமினோ ரோட்ரிகசும் போட்டியிடுகின்றனர்.
இந்த தேர்தலின் வாக்குப்பதிவுகள் நேற்று எண்ணப்பட்டன. அதில் 21 சதவீதத்துக்கு மேற்பட்ட வாக்கு மையங்களில், அதிபர் டேனியல் ஒர்டேகாவின் வெற்றி உறுதியானது. 71.3 சதவீத வாக்குகள் பெற்று அசைக்க முடியாத முன்னணியில் அவர் இருந்தார்.
ரோட்ரிகசுக்கு வெறும் 16.4 சதவீத வாக்குகளே கிடைத்தன. இதன் மூலம் நிகரகுவாவின் அதிபராக தொடர்ந்து 3வது முறையாக டேனியல் ஒர்டேகா தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
கடந்த ஆட்சியில் பல்வேறு முக்கிய பதவிகளுக்கு தனது குடும்ப உறுப்பினர்களையே அமர்த்தினார். இது எதிர்க்கட்சிகள் இடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியதுடன், ஒர்டேகா சர்வாதிகார போக்குடன் திகழ்வதாகவும் கூறிவந்தனர்.
ஆனால் மிகவும் ஏழை நாடுகளில் ஒன்றாக இருந்து வரும் நிகரகுவாவில் ஒர்டேகா மேற்கொண்ட நிலையான வளர்ச்சிப்பணிகளே அவருக்கு இந்த வெற்றியை தந்திருப்பதாக அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.
