தென் கிழக்கு ஆசிய நாடான மியான்மர் மீதான பொருளாதார தடைகளை நீக்கி அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா உத்தரவிட்டுள்ளார். 

மியான்மரில் ராணுவ ஆட்சி கொண்டுவரப்பட்டு, ஆங் சான் சூகி வீட்டுச் சிறையில் வைக்கப்பட்ட உடன் அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்தது. இந்த தடைகள் ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்தது. 

இந்நிலையில், கடந்த ஆண்டு மியான்மரில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்து, ஆங் சான் சூகி தலைமையிலான கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. இதையடுத்து, கடந்த மாதம் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆங் சான் சூகி, அமெரிக்க அதிபர் ஒபாமாவைச் சந்தித்து பேசினார். அப்போது, தங்கள் நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். 

அதே ஏற்றுக்கொண்ட அதிபர் ஒபாமா, மியான் நாட்டின் மீதான அனைத்து விதமான பொருளாதாரத் தடைகளையும் நீக்கி நேற்று உத்தரவிட்டார். இதனால், இனி அமெரிக்கா-மியான்மர் நாடுகளுக்கு இடையே முதலீடு செய்தல், வர்த்தகம் செய்தல், தகவல்நுட்ப பரிமாற்றம், ராணுவ உதவிகள் போன்றவை செய்து கொள்ளப்படும்.