லஷ்கர்-இ-தைபா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதக் குழுக்களின் தலைவர்கள் பாகிஸ்தானில் ரகசியமாகச் சந்தித்துள்ளனர். இந்தியாவில் சமீபத்திய தாக்குதல்களுக்குக் காரணமான இந்த அமைப்புகள் மீண்டும் தாக்குதல்களுக்குத் தயாராகி, நிதி திரட்டி வருகின்றன.

லஷ்கர்-இ-தைபா (LeT) மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது (JeM) பயங்கரவாதக் குழுக்களின் தலைவர்கள் பாகிஸ்தானில் ரகசியமாகச் சந்தித்துப் பேசியதற்கான புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட இந்த அமைப்புகள் இந்தியாவில் அண்மையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்குக் காரணமானவை.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கடந்த ஏப்ரல் மாதம் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட தாக்குதலுடன் லஷ்கர்-இ-தைபாவின் துணைத் தலைவர் சைபுல்லா கசூரி தொடர்புடையவர். அதேபோல், நவம்பர் மாதம் டெல்லியில் செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில் 15 பேர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் ஜெய்ஷ்-இ-முகமது தொடர்பு கொண்டது.

இந்த இரண்டு கொடூரமான தாக்குதல்களுக்குப் பின்னால் இருந்த குழுக்களின் தளபதிகள் பாகிஸ்தானில் சந்தித்துப் பேசியிருப்பது, அந்நாடின் ஆதரவுடன் இந்தக் குழுக்கள் செயல்படுகின்றன என்பதை மீண்டும் உறுதிசெய்கிறது.

தாக்குதல் தளத்தில் ரகசிய சந்திப்பு

லஷ்கர்-இ-தைபா துணைத் தலைவர் சைபுல்லா கசூரி, ஜெய்ஷ் தளபதிகளுடன் பேசியதற்கான புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இந்தச் சந்திப்பு, பாகிஸ்தானின் பஹவல்பூரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமதுவின் தலைமையகத்தில் நடந்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலின்போது குறிவைக்கப்பட்ட பல இடங்களில் இதுவும் ஒன்றாகும்.

அதேபோல், 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் இந்தியப் படைகளால் குறிவைக்கப்பட்ட பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) உள்ள ராவலக்கோட் பகுதியிலும் பயங்கரவாதிகளைத் தயார் செய்யும் 'லாஞ்ச் பேட்கள்' மீண்டும் உருவாக்கப்பட்டு வருவதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

'ஆபரேஷன் சிந்தூருக்கு'ப் பிறகு, இந்த அமைப்புகள் பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள லோயர் தீர் பிராந்தியத்துக்குத் தங்கள் செயல்பாடுகளைப் பகுதி அளவில் மாற்றியமைத்துள்ளன.

தாக்குதலுக்கு நிதி திரட்டல்

டெல்லி கார் குண்டுவெடிப்புக்குப் பிறகு, ஜெய்ஷ்-இ-முகமது மற்றொரு தற்கொலைப்படை தாக்குதலை நடத்தத் தயாராகி வருவதுடன், அதற்கான நிதியைத் திரட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

செங்கோட்டை தாக்குதல் விசாரணையின்போது கிடைத்த தடயங்களின்படி, இந்த பயங்கரவாதக் குழுக்கள் டிஜிட்டல் முறையில் நிதியைத் திரட்டி வருவதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஊடுருவலுக்கு பாகிஸ்தான் ஆதரவு

செப்டம்பர் மாதம் முதல் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ (ISI) மற்றும் சிறப்புச் சேவைக் குழுவின் (SSG) உதவியுடன், லஷ்கர்-இ-தைபா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது பிரிவுகள் காஷ்மீருக்குள் ஊடுருவி, உளவு பார்த்தல் மற்றும் எல்லை தாண்டிய தளவாட நடவடிக்கைகளைச் தீவிரப்படுத்தியுள்ளதாக அறிக்கைகள் வெளியாகி இருந்தன.

இந்த இரண்டு பயங்கரவாதக் குழுக்களின் ஒருங்கிணைந்த உத்தி, இந்தியாவுக்கு எதிராகத் தாக்குதல்களைத் தொடுக்கும் புதிய அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது.