காசாவின் ரஃபா பகுதியில் நிவாரணப் பொருட்கள் விநியோகத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 25 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும் இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வரும் போரின் மத்தியில், காசாவின் ரஃபா பகுதியில் நிவாரணப் பொருட்கள் விநியோகத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது 25 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 70க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் இஸ்ரேலுக்குள் புகுந்து நடத்திய தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். அத்துடன் 251 பேர் பணயக்கைதிகளாக கடத்தப்பட்டனர். இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் காசா மீது போர் தொடுத்தது.
பணயக்கைதிகள் நிலவரம்:
இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகளும், ஒப்பந்தங்களும் மூலம் பல பணயக்கைதிகளை மீட்டிருந்தாலும், ஹமாஸின் பிடியில் இன்னும் 58 பேர் பணயக்கைதிகளாக இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இவர்களில் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
காசாவின் பரிதாப நிலை:
இஸ்ரேல்-ஹமாஸ் போரால் காசாவில் இதுவரை 54 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தொடரும் இந்தப் போரால் காசாமுனையில் அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல்வேறு நாடுகள் நிவாரணப் பொருட்களை அனுப்பி வருகின்றன. அமெரிக்க தொண்டு நிறுவனம் ஒன்று இந்த நிவாரணப் பொருட்களை காசாவில் விநியோகித்து வருகிறது.
ரஃபாவில் துப்பாக்கிச்சூடு:
நேற்று ரஃபாவில் நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டபோது ஏராளமான பாலஸ்தீனியர்கள் குவிந்தனர். அப்போது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் முதலில் 14 பேர் பலியானதாகத் தகவல் வெளியானது. தற்போது பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. 70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இஸ்ரேல் ராணுவத்தின் விளக்கம்:
இந்தத் துப்பாக்கிச்சூடு குறித்து இஸ்ரேல் ராணுவம் விளக்கமளித்துள்ளது. ராணுவ முகாம் அருகே சந்தேகத்திற்கிடமான நபர்கள் இருந்ததால் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், ஹமாஸ் போராளிகள் வேண்டுமென்றே உதவி விநியோகத்தை சீர்குலைத்ததாகவும் இஸ்ரேல் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.
