காசா நகரில் 140 ஹமாஸ் இலக்குகளை இஸ்ரேல் ராணுவம் தாக்கி அழித்துள்ளது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, போர்நிறுத்தப் பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. நேர்மறையான அணுகுமுறைக்குத் தயாராக இருப்பதாககவும் கூறியுள்ளது.
காசா நகரில் ஹமாஸ் பயங்கரவாதிகளைக் குறிவைத்து 140 இடங்களில் தாக்குதல் நடத்தி இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இந்தத் தாக்குதலால் போர்நிறுத்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படுவதாக ஹமாஸ் கூறியுள்ளது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதலில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், இருதரப்பிலும் மோதல்கள் தீவிரமடைந்துள்ளன.
இஸ்ரேல் பாதுகாப்புப் படை தகவல்
இஸ்ரேல் பாதுகாப்புப் படை ஞாயிற்றுக்கிழமை தனது 'எக்ஸ்' சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில், “இஸ்ரேல் பாதுகாப்புப் படையும், விமானப் படையும் இணைந்து காசா நகரில் நடத்திய தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் ராணுவக் கட்டமைப்புகள் மற்றும் வளாகங்கள் தகர்க்கப்பட்டன” எனத் தெரிவித்துள்ளது.
மேலும், "பீரங்கியைத் தாக்கி அழிக்கும் ஏவுகணையை ஏவிய பல்வேறு பயங்கரவாதிகளும் அடையாளம் காணப்பட்டு கொல்லப்பட்டனர்," என்றும், காசாவில் மொத்தம் 140 பயங்கரவாத இலக்குகளை இஸ்ரேல் பாதுகாப்புப் படை தாக்குதல் நடத்தி அழித்துள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை ரத்து
இதற்கிடையில், ஹமாஸ் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேல் தொடர்ந்து நடத்தும் ஆக்ரோஷமான தாக்குதலால், காசாவில் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், "மத்தியஸ்தர்களின் நேர்மறையான எந்தவித அணுகுமுறையையும் பரிசீலனை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்," என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கின்றது. இதனால், காசாவில் தற்காலிக போர்நிறுத்தத்திற்கான வாய்ப்புகள் மேலும் நீடிப்பதாகத் தெரிகிறது.
