அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் ஒரு குடும்பத்தை பெரிய தீ விபத்தில் இருந்து காப்பாற்றிய ‘பக்’ இன நாய்க்கு ‘நகரத்தின் ஹீரோ விருது’ வழங்கப்பட்டுள்ளது.
பொதுவாக வீர, தீரச்செயல்கள் புரிந்த மனிதர்களுக்குத்தான் இந்த விருது வழங்கப்படுவது வழக்கம். ஆனால், முதல் முறையாக மெரிடியன் நகரில் இப்போது ‘ஜாக்சன்’ என்ற பெயர் கொண்ட ‘பக்’ இன நாய்க்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மெரிடியன் சிட்டி உள்ள இதாஹோ பகுதியில் வசித்து வருபவர் டோட் லோவி. இவர் தனது வீட்டில் ‘பக்’ இன நாயை வளர்த்து வருகிறார். இதற்கு ஜாக்சன் என பெயரிட்டு இருந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் 29-ந்தேதி இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டு இருந்தனர். அப்போது, வீட்டில் இருந்த மின்சார இணைப்பில் கோளாறு ஏற்பட்டு தீ பிடிக்கத் தொடங்கியது.
இதைக் கண்ட ஜாக்சன் நாய், எப்போதும் இல்லாத வகையில் சத்தமாகவும், ஆவேசமாகவும் தனது முதலாளியை எழுப்பும் வகையில் குரைத்தது. இந்த சத்தம் கேட்டு எழுந்த டோட் லோவி, ெவளியே வந்து பார்த்தபோது, தீ எரிந்து கொண்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தனது வீட்டில் இருந்த தீயணைக்கும் கருவியின் மூலம் அவர் தீ பரவாமல் அணைத்துள்ளார். மேலும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தார். அவர்கள் விரைந்து வந்து ஆய்வு செய்து, தீ விபத்துக்கான காரணத்தை அறிந்தனர்.
மேலும், ஜாக்சன் நாய் மட்டும் சரியான நேரத்தில் எழுப்பாமல் இருந்திருந்தால் பெரிய அளவிலான தீவிபத்து ஏற்பட்டு, உயிரிழப்புகளும், பொருள் இழப்புகளும் ஏற்பட்டு இருக்கும் என நாயை பாராட்டிச் சென்றனர்.
இதையடுத்து, நகரின் வீர தீர செயலுக்கான ‘நகர ஹீரோ விருதை’ ஜாக்சன் நாய்க்கு நகரத்தின் மேயர் டேமி டி வீர்ட் வழங்கினார்.
