Asianet News TamilAsianet News Tamil

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வீட்டின் மீது ட்ரோன் தாக்குதல்!!

ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார் கொல்லப்பட்ட சிறிது நேரத்திலேயே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கைசேரியாவில் உள்ள இல்லத்தை நோக்கி ஒரு ட்ரோன் ஏவப்பட்டது. நெதன்யாகுவும் அவரது மனைவியும் அந்தப் பகுதியில் இல்லை என்றும், தாக்குதலில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் அவரது செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.

Drone hits Benjamin Netanyahu home in Israel
Author
First Published Oct 19, 2024, 4:06 PM IST | Last Updated Oct 19, 2024, 4:06 PM IST

Tel Aviv: ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார் கொல்லப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, சனிக்கிழமை (அக். 19) இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் சசரியா நகரில் உள்ள இல்லத்தை நோக்கி ஒரு ட்ரோன் ஏவப்பட்டது. அவரது இல்லத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலின்போது வீட்டில் அவரும், அவரது மனைவியும் இல்லை என்றும், உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் நெதன்யாகுவின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தி உள்ளார். 

"சசரியாவில் உள்ள பிரதமரின் இல்லத்தை நோக்கி ஒரு ஆளில்லா விமானம் (UAV) ஏவப்பட்டது. பிரதமரும் அவரது மனைவியும் அந்த இடத்தில் இல்லை, மேலும் சம்பவத்தில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை" என்று பிரதமர் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பிரதமர் அலுவலகத்தின்படி, இந்தச் சம்பவம் பிரதமர் நெதன்யாகு மற்றும் அவரது மனைவி சாராவுக்கு அருகாமையில் தான் நடந்துள்ளது.  இதற்கிடையில், லெபனானில் இருந்து இஸ்ரேல் வான்வெளிக்குள் நுழைந்த இரண்டு ட்ரோன்களை ராணுவப் படைகள் இடைமறித்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவித்தன. ட்ரோன்களில் ஒன்று ரேடார் கண்காணிப்பிற்கு கீழே பறந்துள்ளது. மற்றொன்று இஸ்ரேல் ஹெலிகாப்டருக்கு அருகில் சென்றது.

கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் இஸ்ரேலுடன் தொடர்ந்து போரில் ஈடுபட்டு வரும் ஹிஸ்புல்லா அல்லது வேறு எந்த போராளிக் குழுவோ இந்த ட்ரோன் தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை.

யஹ்யா சின்வார் உட்பட பல ஹமாஸ் தலைவர்களை இஸ்ரேல் கொன்றதைத் தொடர்ந்து இந்த ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. சின்வாரின் மரணத்தை வெள்ளிக்கிழமை அந்தக் குழு உறுதிப்படுத்தியது. அன்றைய தினம், இஸ்ரேல் பகுதிக்குள் கூடுதல் வழிகாட்டப்பட்ட ஏவுகணைகள் மற்றும் வெடிக்கும் ட்ரோன்களை ஏவுவதன் மூலம் மோதலைத் தீவிரப்படுத்த ஹிஸ்புல்லா திட்டமிட்டுள்ளதாக அறிவித்தது. செப்டம்பர் மாத இறுதியில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் நீண்டகால தலைவர் ஹசன் நஸ்ரல்லாவும் கொல்லப்பட்டார், இதையடுத்து இந்த மாத தொடக்கத்தில் லெபனானில் தரைப்படைகளை இஸ்ரேல் நிறுத்தியது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios