ஏழு முறை ஒத்திவைக்கப்பட்ட ஆக்சியம்-4 விண்வெளிப் பயணம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லும் முதல் இந்திய விண்வெளி வீரர் என்ற பெருமையை சுபான்ஷு சுக்லா பெறுகிறார்.
பல்வேறு காரணங்களால் ஏழு முறை ஒத்திவைக்கப்பட்ட ஆக்சியம்-4 (Axiom-4) விண்வெளிப் பயணத்திட்டம் இன்று விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று வரும் முதல் இந்திய விண்வெளி வீரர் என்ற பெருமையைப் சுபான்ஷு சுக்லா பெறவுள்ளார்.
அமெரிக்காவின், 'ஆக்சியம் ஸ்பேஸ்' தனியார் நிறுவனம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான பயண திட்டத்தில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ இணைந்து, இப்பணியை செய்து வருகிறது. இத்திட்டத்தை நாசா விஞ்ஞானி பெக்கி விட்சன் இந்த திட்டத்தை தலைமை ஏற்று வழிநடத்துகிறார். இவருடன் இஸ்ரோ விஞ்ஞானி சுபான்ஷு சுக்லா, போலந்தைச் சேர்ந்த ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் (ESA) விண்வெளி வீரர் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி-விஸ்னீவ்ஸ்கி, ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு ஆகியோர் செல்கின்றனர்.
மொத்தம் 14 நாட்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் இவர்கள், சுமார் 60 ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர். இந்தியா சார்பில் சுபான்ஷு சுக்லா 7 ஆய்வுகளை மேற்கொள்வார் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து பால்கன்-9 ராக்கெட்டில் மூலம் இன்று (ஜூன் 25) நண்பகல் 12 மணிக்கு இந்திய வீரர் சுக்லா குழு விண்வெளி நிலையத்திற்கு செல்கிறது. 28 மணிநேர பயணத்திற்கு பிறகு, நாளை (ஜூன் 26) மாலை 4.30 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தை ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் அடைய உள்ளது. பல்வேறு காரணங்களால் தொடர்ந்து 7 முறை ஒத்திவைக்கப்பட்டு தற்போது 8வது முறையாக வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ஆக்சியம்-4 திட்டத்தில் இடம்பெற்றிருக்கும் இஸ்ரோ விஞ்ஞானி சுபான்ஷு சுக்லா, இந்தியாவில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் முதல் இந்திய விண்வெளி வீரர் என்ற பெருமையை பெறுகிறார்.
சுபான்ஷு சுக்லா யார்?
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த சுபான்ஷு சுக்லா, கடந்த 2006-ல் இந்திய விமானப்படையில் சேர்ந்தார். 2024-ம் ஆண்டில் குழு கேப்டனாக பொறுப்பேற்றார். இந்த சூழ்நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு இஸ்ரோவின் ககன்யான் திட்டத்துக்காக சுபான்ஷு தேர்வு செய்யப்பட்டார். இதற்காக ரஷ்யாவின் யூரி காகரின் விண்வெளி மையத்தில் சேர்ந்து இவர் சிறப்புப் பயிற்சி பெற்றார். 41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளி நிலையம் செல்லும் இந்தியர் என்ற சாதனையை சுபான்ஷு சுக்லா படைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
