டோக்கியோ நோக்கிச் சென்ற விமானம் ஒன்று திடீரென உயரத்தில் இருந்து சரிந்ததால், பயணிகள் பீதியடைந்தனர். கேபின் அழுத்தம் குறைந்ததால் ஆக்ஸிஜன் முகமூடிகள் விழுந்தன, விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

டோக்கியோ நோக்கிச் சென்ற போயிங் 737 விமானம் ஒன்று திடீரென கீழே சரிந்ததால் அவசரமாக தரையிறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த விமானம் 36,000 அடியில் இருந்து 10 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் 10,500 அடிக்குக் கீழே சரிந்ததால், விமானி விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்திற்கு (ATC) அவசர நிலையை அறிவித்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கேபின் அழுத்தம் குறைந்ததால், பயணிகள் ஆக்ஸிஜன் முகமூடிகளை உடனடியாக அணிந்துகொள்ளுமாறு விமானப் பணியாளர்கள் அறிவுறுத்தினர்.

ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் JL8696, 191 பயணிகள் மற்றும் குழுவினருடன், சீனாவில் உள்ள ஷாங்காய் புடாங் விமான நிலையத்தில் இருந்து திங்கட்கிழமை புறப்பட்டது. உள்ளூர் நேரப்படி மாலை 6:53 மணியளவில், விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு, உயரம் குறையத் தொடங்கியது. பின்னர், விமானம் ஒசாகாவில் உள்ள கன்சாய் சர்வதேச விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டு, இரவு 8:50 மணியளவில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இந்த விமானம் ஸ்பிரிங் ஏர்லைன்ஸ் ஜப்பானின் கோட்-ஷேர் சேவையின் கீழ் இயக்கப்பட்டது. அதாவது, ஒரு விமான நிறுவனம் விமானத்தை இயக்க, மற்றொரு நிறுவனம் டிக்கெட்டுகளை விற்பனை செய்கிறது.

ஸ்பிரிங் ஏர்லைன்ஸ்

ஸ்பிரிங் ஏர்லைன்ஸ் ஜப்பான், 2012 செப்டம்பரில் ஷாங்காயை தளமாகக் கொண்ட ஸ்பிரிங் ஏர்லைன்ஸ் மற்றும் ஜப்பான் ஏர்லைன்ஸ் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக நிறுவப்பட்டது. ஜூன் 2021 இல், ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பெரும்பான்மை உரிமையாளரானது, ஸ்பிரிங் ஏர்லைன்ஸ் 33% பங்குகளைத் தக்கவைத்துக்கொண்டது.

விமானம் சரிந்தபோது ஒரு அழுத்த அமைப்பு எச்சரிக்கை (pressurisation system alert) தூண்டப்பட்டது. இது விமானத்தின் கேபின் அழுத்த அமைப்பில் கோளாறு ஏற்பட்டதைக் குறிக்கிறது என ஜப்பானிய போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது.

விமானத்தின் உள்ளே இருந்து எடுக்கப்பட்ட ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில், விமானம் உயரம் குறையும்போது பயணிகள் ஆக்ஸிஜன் முகமூடிகளை அணிந்திருப்பதைக் காண முடிகிறது.

சமீபத்திய போயிங் விபத்துகள்:

இந்தச் சம்பவம், லண்டனின் கேட்விக் விமான நிலையத்திற்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானதை அடுத்து நிகழ்ந்துள்ளது. அந்த விபத்தில், ஒரு பயணி தவிர மற்ற அனைவரும் இறந்தனர். அந்த விமானம் ஒரு போயிங் 787 ட்ரீம்லைனர் ஆகும்.

அந்த விபத்து குறித்த விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதிலும், ஆரம்ப கட்ட கண்டுபிடிப்புகள் இரட்டை என்ஜின் செயலிழப்பு ஏற்பட்டது என்று கூறுகின்றன. இது மிகவும் அரிதானது, ஏனெனில் ராம் ஏர் டர்பைன் (RAT) எனப்படும் அவசர மின் அமைப்பு விமானிகளால் இயக்கப்பட்டது. போயிங் விமானங்களில் தொடர்ந்து ஏற்படும் இதுபோன்ற சம்பவங்கள் விமானப் பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பியுள்ளன.