அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் மோதிய இரண்டாவது நேரடி விவாத நிகழ்ச்சி செயின்ட் லூயிஸ் நகரில் இன்று காலை நடைபெற்றது. இதில் ஹிலரி கிளிண்டனும் டொனால்ட் ட்ரம்பும் பரஸ்பரம் குற்றம்சாட்டினார்கள்.
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிகாலம் இந்த ஆண்டு முடிவடைகிறது. இதனை அடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 8 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக, முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் ட்ரம்பும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் இரண்டாவது நேரடி விவாத நிகழ்ச்சி நடைபெற்றது.
அவ்விவாத நிகழ்ச்சியில் பெண்களைத் தரக்குறைவாகப் பேசியவர், வரிகட்டாமல் ஏமாற்றியவர் என டொனால்ட் ட்ரம்ப் மீது ஹிலரி கிளிண்டன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தார். இதற்குப பதிலளித்த ட்ரம்ப், அரசு மின்னஞ்சல்களை ஹிலரி அழித்ததாகவும், வெளியுறவு அமைச்சராகத் தோல்வியடைந்ததாகவும் கூறினார்.
இந்த விவாத நிகழ்ச்சியில் சிரியா விவகாரம், லிபியாவில் நடந்த யுத்தம், அகதிகள் பிரச்னை போன்றவை குறித்து பொதுமக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு இருவரும் பதில் அளித்தனர். 90 நிமிடங்கள் நடைபெற்ற இவ்விவாதத்தில் ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்க வேட்பாளர்களுக்கு 2 நிமிடங்கள் அவகாசம் வழங்கப்பட்டது.
இந்த விவாத நிகழ்ச்சி தொடர்பான சி.என்.என். தொலைகாட்சியின் கருத்துகணிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலரி கிளிண்டன் 57 சதவிகித ஆதரவு பெற்று முன்னிலை வகிக்கிறார்.
அவரை எதிர்த்து போட்டியிடும் குடியரசு கட்சியின் டொனால்ட் ட்ரம்ப் 34 சதவிகிதம் பெற்றுள்ளார். முன்னதாக கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி நடைபெற்ற முதல் விவாத நிகழ்ச்சியில் ஹிலரி 62 சதவிகித ஆதரவுடன் வெற்றி பெற்றார்.
