சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும்  கேலக்ஸி எஸ்22 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது. 

சாம்சங் நிறுவனம் பிப்ரவரி 9 ஆம் தேதி கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இந்த நிகழ்வில் சாம்சங் தனது கேலக்ஸி எஸ்22 சீரிஸ் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிகழ்வு இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு துவங்குகிறது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

முந்தைய வழக்கப்படி சாம்சங் தனது கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வை ஆன்லைனில் நேரலை செய்ய இருக்கிறது. புது ஸ்மார்ட்போன்களை இதுவரை அறிமுகம் செய்யவில்லை என்றாலும், இதற்கான முன்பதிவுகளை சாம்சங் ஏற்கனவே துவங்கிவிட்டது. மேலும் முன்பதிவு செய்வோருக்கு சிறப்பு சலுகைகளையும் சாம்சங் அறிவித்து இருக்கிறது.

புதிய கேலக்ஸி எஸ்22 சீரிசில் - கேலக்ஸி எஸ்22, கேலக்ஸி எஸ்22 பிளஸ், கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா என மூன்று ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இவற்றில் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா மாடல் கேலக்ஸி நோட் மாடலுக்கு மாற்றாக அறிமுகமாகிறது. இந்த மாடலில் எஸ் பென் ஸ்டைலஸ் பயன்படுத்துவதற்கான வசதி வழங்கப்படுகிறது.

அம்சங்களை பொருத்தவரை புதிய கேலக்ஸி எஸ்22 சீரிஸ் மாடல்களில் 6.8 இன்ச் வளைந்த குவாட் HD பிளஸ் 120Hz ரிப்ரெஷ் ரேட் ஸ்கிரீன், எக்சைனோஸ் 2200 அல்லது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் வழங்கப்படும் என தெரிகிறது.

இத்துடன் 12GB+256GB,12GB+512GB மற்றும் 16GB+1TB போன்ற மெமரி ஆப்ஷன்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 108MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 10MP 3x டெலிபோட்டோ லென்ஸ், 10MP 10x டெலிபோட்டோ கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் 5000mAh பேட்டரி, 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம்.

ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போன்களின் விலை விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. அதன்படி கேலக்ஸி எஸ்22 மாடலின் விலை 849 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 71,801 துவங்கும் என கூறப்படுகிறது. கேலக்ஸி எஸ்22 பிளஸ் விலை 1049 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 88,716 என்றும் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா விலை 1249 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 1,05,630 என்றும் நிர்ணயம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.