Asianet News TamilAsianet News Tamil

Twitter Layoffs: பெருவாரியான பணியார்களை பணி நீக்கம் செய்தது ஏன்? Elon Musk பதில்

Twitter நிறுவனத்தில் பெருவாரியான பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், எதற்காக இந்த பணி நீக்க நடவடிக்கை என்று எலான் மஸ்க் பதிலளித்துள்ளார். Elon Musk on Massive Layoffs
 

no choice when the twitter is losing over $4M/day, says elon musk on twitter massive layoffs
Author
First Published Nov 5, 2022, 2:05 PM IST

கடந்த வாரம் சுமார் 44 பில்லியன் டாலர் கொடுத்து டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் விலைக்கு வாங்கினார். அதற்கு முன்பிருந்தே டுவிட்டர் நிறுவனத்தின் வரவு செலவு, பயனர்களுக்கான வசதிகள் ஆகியவற்றை குறித்து ஆய்வு செய்து வந்தார். டுவிட்டர் நிறுவனத்தில் ஏகப்பட்ட குழப்பங்கள் இருப்பதாகவும், சரி செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய இருப்பதாகவும் கருதினார்.

எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதும் செலவுகளைக் குறைத்து வருவாயைப் பெருக்குவதற்காக அதிரடியான நடவடிக்கைகளில் இறங்கினார். அதன் உச்சக்கட்டமாக சுமார் 4 ஆயிரம் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வந்தன. அதன்படி, நேற்று வெள்ளியன்று பணி நீக்க நடவடிக்கைகள் தொடங்கின. 

இந்தியாவிலுள்ள டுவிட்டர் நிறுவனத்தில் மார்க்கெட்டிங், கம்யூனிகேஷன் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றி வந்தவர்களை பாரபட்சமின்றி பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதே போல் அமெரிக்காவில் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக டுவிட்டரில் பணிபுரிந்தவர்கள் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டனர். 

எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தின் இந்த நடவடிக்கைக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பணி நீக்கம் செய்யப்பட்ட பல பணியாளர்கள் நீண்ட காலமாக டுவிட்டரின் வளர்ச்சிக்காகவே பாடுபட்டனர், குடும்பம் குழந்தைகளோ இருப்பவர்கள். டுவிட்டரை நம்பி தனிப்பட்ட வாழ்க்கையில் பல விஷயங்களில் பொறுப்பு எடுத்தவர்கள். ஆனால், அவை அனைத்தும் தவிடுபொடியாக்கும் வகையில் வேலையை விட்டு நீக்கப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது என்று பலர் ட்வீட் செய்து வருகின்றனர். 

Twitter அலுவலகம் தற்காலிகமாக மூடல்? பணியாளர்களுக்கு அப்படி என்ன மெயில் அனுப்பப்பட்டது?

இவ்வாறு டுவிட்டர் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டாலும், அந்த பணியாளர்களுக்கு ஆதரவாக பிற நிறுவன ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். டுவிட்டரில் பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்கள் எந்தவிதமான வெளியேறும் போது எந்த கையெழுத்தும் இட வேண்டாம், சட்ட ரீதியான நடவடிக்கையை எதிர்கொள்ளலாம் என்று பொது வழக்கறிஞர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 

இந்த நிலையில், டுவிட்டர் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவது ஏன் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் வகையில், எலான் மஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில் பல ட்வீட்களை செய்துவருகிறார். 

அதில் எலான் மஸ்க் கூறியதாவது, ‘டுவிட்டரில் அதிரடியான பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. டுவிட்டர் நிறுவனம் தினமும் 4 மில்லியன் டாலர் நஷ்டமடைந்து வருகிறது. எனவே, துரதிர்ஷ்டவசமாக வேறு வழியின்றி இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. எல்லோரும் 3 மாதம் நோட்டீஸ் காலம், பணி நீட்டிப்பு காலத்தை எதிர்பார்த்தனர். ஆனால், இது சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட வசதிகளை விட 50 சதவீதம் அதிக வசதி ஆகும்.’ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 

 

 

இதற்கு முன்பு கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி எலான் மஸ்க் ஒரு ட்வீட்டுக்கு பதிலளித்திருந்தார். அதில் அவர், ‘டுவிட்டர் நிறுவனத்தில் ஒருவர் செய்யும் வேலையை பத்து பேர் செய்வதாக தெரிகிறது’ என்று குறிப்பிட்டிருந்தார். அதாவது, டுவிட்டரில் அளவுக்கு அதிகமாக பணியாளர்கள் இருப்பதாகவும், அவர்கள் மிகக்குறைந்த வேலையை செய்து அதிகமான சம்பளம் பெற்று வருவதாகவும் கூறினார்.

 

 

இந்தியாவிலும் எலான் மஸ்க் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் கருத்துகள்  வருகின்றன. இதற்கு முன்பு சிஇஓ பதவியில் இருந்த பராக் அகர்வால் இந்தியர். எலான் மஸ்க் டுவிட்டரை கைப்பற்றியதுமே பராக் அகர்வால் பணி நீக்கம் செய்யப்பட்டார். தற்போது இந்திய டுவிட்டர் அலுவலகத்தில் பல துறைகளில் பணியாற்றி வந்தவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

இதன் பிறகும் பணி நீக்க நடவடிக்கை தொடரும் என்றும், ஒட்டு மொத்தமாக டுவிட்டர் நிறுவனத்தில் பாதி பணியாளர்கள் வேலையை விட்டு நீக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை சட்டத்திற்கு உட்பட்டு எடுக்கப்படுகிறதா, அந்தந்த நாடுகளில் உள்ள சட்டம் இதை அனுமதிக்கிறதா என்பது குறித்த விவரங்கள் விரைவில் தெரியவரும்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios