பிரபல யூடியூபர்கள், கிரிக்கெட் வீரர்கள், தொழிலதிபர்கள் போன்றோரின் போலி வீடியோக்கள் மற்றும் டீப்ஃபேக்குகளை உருவாக்கி மோசடி நடந்தது.
இந்தியா மற்றும் பிரேசில் பயனர்களை குறிவைத்து பெரிய அளவிலான சைபர் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஃபேஸ்புக் பக்கங்கள் மற்றும் கணக்குகளை நீக்கியதாக ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா அறிவித்துள்ளது. 23,000க்கும் மேற்பட்ட போலி கணக்குகள் மற்றும் பக்கங்களை நீக்கியதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
மெட்டா நிறுவனம் அறிவிப்பு
பிரபல யூடியூபர்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் தொழிலதிபர்களின் போலி வீடியோக்கள் மற்றும் டீப்ஃபேக்குகளை உருவாக்கி மக்களை ஏமாற்றி பணம் பறித்தனர். இந்த போலி கணக்குகள் மூலம், முதலீட்டு ஆலோசனை வழங்குவதாகக் கூறி மெசேஜிங் செயலிகளுக்கு மக்களை அழைத்தனர். பின்னர், போலி வலைத்தளங்களுக்கு அவர்களை அனுப்பி அவர்களின் பணத்தைத் திருடினர்.
23,000 கணக்குகளை தூக்கிய மெட்டா
மார்ச் மாதத்தில் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்ட 23,000க்கும் மேற்பட்ட ஃபேஸ்புக் பக்கங்கள் மற்றும் கணக்குகளை நீக்கியதாக மெட்டா தெரிவித்துள்ளது. பயனர்களை விழிப்புணர்வுடன் வைத்திருக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் நிறுவனம் கூறுகிறது. ஆன்லைன் முதலீடு மற்றும் கட்டண மோசடிகளைத் தவிர்ப்பதற்கான உதவிக்குறிப்புகள் மற்றும் முக்கியமான தகவல்களை மக்களுக்கு வழங்குகிறது. இதன் மூலம், பயனர்கள் இந்த ஆபத்துகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று மெட்டா கூறுகிறது.
இந்தியாவில் 375 மில்லியன் வாடிக்கையாளர்கள்
மெட்டாவின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற தளங்களை இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் ஃபேஸ்புக்கிற்கு மட்டும் 375 மில்லியனுக்கும் அதிகமான (37.5 கோடி) பயனர்கள் உள்ளனர். அதனால்தான் இதுபோன்ற மோசடிகள் இந்தியாவிற்கு பெரும் கவலையாக உள்ளது. இதுபோன்ற மோசடிகளைத் தடுக்க மெட்டா தொழில்நுட்பம், கொள்கை மற்றும் பொது விழிப்புணர்வு ஆகியவற்றில் தொடர்ந்து கவனம் செலுத்துகிறது.
இந்திய சைபர் கிரைம் மையம்
ஆன்லைன் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் விழிப்புணர்வை ஊக்குவிக்க தொலைத்தொடர்புத் துறை (DoT), நுகர்வோர் விவகாரத் துறை (DoCA), இந்திய சைபர் கிரைம் மையம் (I4C) போன்ற இந்திய அரசின் பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவதாக மெட்டா தெரிவித்துள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள காவல்துறை மற்றும் பிற அதிகாரிகளுக்கு மோசடிகளைக் கையாள்வதற்கான பயிற்சிப் பட்டறைகளையும் நிறுவனம் நடத்தியுள்ளது.


