மத்திய டெலிகாம் துறை அமைச்சர் வெளியிட்ட தகவல்களின் படி இந்தியாவில் ஜூன் மாதமே ஸ்பெக்ட்ரம் ஏலம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

ஸ்பெக்ட்ரம் ஏலம் காரணமாக இந்தியாவில் 5ஜி சேவைக்கான வெளியீடு ஏற்கனவே தாமதம் ஆகிவிட்டது. இந்த நிலையில், 5ஜி ஸ்பெக்ட்ரத்திற்கான ஏலம் மேலும் தாமதம் ஆகும் என தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் 5ஜி வெளியீடு மேலும் தாமதம் ஆகும் சூழல் ஏற்பட்டு உள்ளது. டெலிகாம் சேவை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் தனியார் நெட்வொர்க்குகளை பயன்படுத்த விருப்பம் தெரிவிப்பதே 5ஜி ஸ்பெக்ட்ரத்திற்கான ஏலம் தாமதம் ஆக காரணம் என கூறப்படுகிறது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

முன்னதாக மத்திய டெலிகாம் துறை அமைச்சர் வெளியிட்ட தகவல்களின் படி இந்தியாவில் ஜூன் மாதமே ஸ்பெக்ட்ரம் ஏலம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. எனினும், 5ஜி வெளியீட்டுக்கான டிராய் திட்டங்களை மந்திரி சபை இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை. மந்திரி சபை ஒப்புதலுக்கு பின் விண்ணப்பங்களை கோரும் நோட்டீஸ் வெளியிடுவது, பங்குதாரர் சந்திப்பு உள்ளிட்டவைகளை நடத்த குறைந்த பட்சம் 45 நாட்கள் ஆகும். 

ஸ்பெக்ட்ரம் ஏலம்:

இதன் காரணமாக இந்தியாவில் ஸ்பெக்ட்ரம் ஏலம் ஜூன் மாதம் நடைபெறுவதில் சந்தேகம் அதிகரித்து உள்ளது. பல்வேறு தொழில்துறை அமைப்புகள் மற்றும் தனியார் நஇறுவனங்கள் தங்களுக்கும் 5ஜி நெட்வொர்க்குகளை ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. தனியார் நெட்வொர்க் பயனர்கள் தவிர்த்து, தற்போதைய ஏலத்தில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இந்த அமைப்பு மற்றும் நிறுவனங்கள் அரசிடம் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி வருகின்றன. 

தங்களை நாட்டில் இருந்து வெளியே வைத்தால், பொருளாதாரத்தை டிஜிட்டல் மயமாக்கி, சர்வதேச சந்தையில் ஆதிக்கம் செலுத்த நினைக்கும் நாட்டின் திட்டம் வெகுவாக பாதிக்கப்படும் என இந்த அமைப்பு மற்றும் நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

அமேசான், சிஸ்கோ, பேஸ்புக், கூகுள், இண்டெல், அதானி மற்றும் ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் பிராட்பேண்ட் இந்தியா ஃபோரம் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பு சார்பில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பற்றி மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டு இருக்கிறது.