ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டு இருக்கும் புது ஐ.ஒ.எஸ். அப்டேட்டில் அசத்தலான அம்சம் சேர்க்கப்பட்டு இருக்கிறது.

ஆப்பிள் நிறுவனம் ஐ.ஒ.எஸ். 15.4 பீட்டா வெர்ஷனை டெவலப்பர்களுக்கு வெளியிட்டு உள்ளது. புதிய பீட்டா வெர்ஷனில் ஐபோன் வைத்திருப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ள அம்சம் சேர்க்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் செயல்பாட்டு வந்ததும், முகக்கவசம் அணிந்து இருந்தாலும், ஐபோன்களில் உள்ள ஃபேஸ் ஐ.டி. சீராக இயங்கும். எனினும், இதற்கு ஐபோன் 12 மற்றும் அதன் பின் வெளியான ஐபோன்களில் ஒன்றை நீங்கள் வைத்திருக்க வேண்டும். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தற்போது இருக்கும் ஐ.ஒ.எஸ். வெர்ஷன்களில் முகக்கவசத்தை கழற்றினால் மட்டுமே ஃபேஸ் ஐ.டி. இயங்குகிறது. கொரோனா பெருந்தொற்று கோரத்தாண்டவம் ஆடி வரும் சூழலில், இது எல்லா சமயங்களிலும் செய்ய முடியாத ஒன்றாகும். இதனை கையாள ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் வாட்ச் மூலம் ஐபோனினை அன்லாக் செய்யும் வசதியை வழங்கி வருகிறது. எனினும், ஐபோன் வைத்திருக்கும் அனைவருக்குமான வசதியாக இது இல்லை.

ஐ.ஒ.எஸ். 15.4 பீட்டா வெர்ஷனில் உள்ள புது அம்சம், பயனர் கண் மற்றும் அதை சுற்றியுள்ள பிரத்யேக அம்சங்களை கொண்டு ஐபோனை அன்லாக் செய்கிறது. எனினும், இதை செயல்படுத்த “Face ID with a Mask” எனும் ஆப்ஷனை பயனர்கள் தேர்வு செய்ய வேண்டும். முகம் முழுவதையும் ஸ்கேன் செய்யும் போது ஃபேஸ் ஐ.டி. சிறந்த பாதுகாப்பை வழங்கும் என நம்பலாம். எனினும், தற்போதைக்கு இந்த அம்சம், பயனர் எதிர்கொண்டு வரும், பெரும் சிக்கலை சரி செய்கிறது. 

முகக்கவசத்துடன் ஃபேஸ் ஐ.டி. சீராக இயங்குகிறது என்றாலும், இந்த ஆப்ஷனை பயன்படுத்தும் போது பயனர்கள் கண்ணாடி அணிந்திருக்க கூடாது. கண்ணாடி அணிந்திருப்பின் இந்த அம்சம் சீராக இயங்காது. தற்போது இந்த சூழல் இருந்தாலும், எதிர்காலத்தில் கண்ணாடி அணிந்தபடி ஃபேஸ் ஐ.டி. அம்சத்தை பயன்படுத்தும் வசதியை ஆப்பிள் வழங்கும் என எதிர்பார்க்கலாம்.