OpenAI மற்றும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வில், 15 லட்சம் பயனர்களின் உரையாடல்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன.
உலகின் மிகவும் பிரபலமான செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட் தளங்களில் உள்ள சாட்ஜிபிடி, தற்போது கோடிக்கணக்கான மக்களின் தினசரி வாழ்க்கையில் ஒரு பகுதியாக உள்ளது. பலர் இதை ‘கோடிங்’ க்கே அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்று நினைத்தாலும், OpenAI நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வு வேறுபட்ட உண்மையை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த ஆய்வில் 15 லட்சம் பயனர்களின் உரையாடல்கள் ரகசியமாக பகுப்பாய்வு செய்யப்பட்டது. அதில் சாட்ஜிபிடி அதிகம் பயன்படுத்தப்படுவது மூன்று முக்கிய நோக்கங்களுக்காகவே என தெரிய வந்துள்ளது. அவை கேட்பது (Asking), செய்வது (Doing), வெளிப்படுத்துவது (Expressing) ஆகியவை ஆகும்.
மொத்தமாக 49% பேர் சாட்ஜிபிடி-யை கேள்விகள் கேட்பதற்காக பயன்படுத்துகிறார்கள். சுமார் 40% பேர் வேலை தொடர்பான உதவிக்கு (மின்னஞ்சல் எழுதுதல், திட்டமிடல் போன்றவை) பயன்படுத்துகின்றனர். மேலும் 11% பேர் தங்கள் சிந்தனைகள், உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காக பயன்படுத்துகிறார்கள்.
OpenAI நிறுவனத்தின் பொருளாதார ஆராய்ச்சி குழுவும், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டேவிட் டெமிங் அவர்களும் சேர்ந்து தயாரித்த ஆய்வறிக்கையில், சாட்ஜிபிடி பெரும்பாலும் தகவல் அறிதல், நடைமுறை வழிகாட்டல் மற்றும் எழுதுதல் உதவி போன்ற பணிகளுக்காகவே அதிகம் பயன்படுத்தப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம், சாட்ஜிபிடி என்பது வெறும் ‘கோடிங்’ கருவி அல்ல; மாறாக, தினசரி வேலைகளிலிருந்து தனிப்பட்ட உரையாடல்கள் வரை பல்வேறு பயன்பாடுகளுக்கான முக்கிய துணை கருவியாக மாறியுள்ளது.
