சீமை கருவேல மரங்களால் உயிர்க்காற்று இன்றி வாழும் விருதுநகர்…
விருதுநகர்:
சீமைக் கருவேல மரங்கள் அதிகம் இருப்பதாலும், வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருப்பதாலும் விருதுநகரில் “உயிர்க்காற்று பூங்கா” (ஆக்சிஜன் பார்க்) அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என்று ஆட்சியர் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் கண்மாய், காலி இடம், அரசு வளாகம் என எங்கு திரும்பினாலும் சீமைகருவேல முள் மரங்கள் புதராக காட்சியளிக்கும்.
நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சும் தன்மை, வறட்சி காலத்தில் காற்றில் உள்ள ஈரப்பதத்தை ஈர்த்து மழையின்மையை மேலும் அதிகரிக்க செய்யும் தன்மை இந்த மரங்களுக்கு உண்டு.
இவற்றால் ஏற்படும் தீமைகளை விளக்கி விருதுநகர், அருப்புக்கோட்டை, ராஜபாளையம், சத்திரரெட்டியபட்டி போன்ற பகுதிகளில் இளைஞர்கள் சீமைகருவேல முள் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது போல் விருதுநகர் ஆட்சியர் அலுவலக வளாகத்தை சுற்றி இந்த மரங்கள் அதிகம் வளர்ந்துள்ளன. ஆட்சியர் அலுவலக வளாகத்தில், சீமைகருவேல மரங்கள் அகற்ற மண் அள்ளும் இயந்திரம் மூலம் கூரைக்குண்டு ஊராட்சி சார்பில் அகற்றப்பட்டன.
உள்ளாட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இப்பகுதியை சுத்தப்படுத்தி ஆக்சிஜன் அதிகம் அளிக்கும் மூங்கில் மரக்கன்று மற்றும் நாவல், வேம்பு கன்றுகள் அமைத்து, ஆக்சிஜன் பார்க் அமைக்க உள்ளோம்.
வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள விருதுநகரில், மனு கொடுக்க வருபவர்கள் இளைப்பாற இவ்விடம் வசதியாக அமையும்,” என்றார்.