மீன் வியாபாரியிடம் போலி 2000 ரூபாய்த்தாள் கொடுத்து மோசடி - வாலிபர்களுக்கு போலீசார் வலை
மீன் வியாபாரம் செய்யும் பெண்ணிடம் 2000 போலி ரூபாய் நோட்டுகளை கொடுத்து ஏமாற்றிய இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை திருவொற்றியூர் மீன் சந்தையில் குப்பம்மாள் என்ற மீன் வியாபாரியிடம் 2 போலி 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை கொடுத்து ஏமாற்றிய இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவொற்றிரைச் சேர்ந்தவர் குப்பம்மாள். இவர் அங்குள்ள மீன் சந்தையில் நாள்தோறும் மீன் விற்பனை செய்து வருகிறார். இவர் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று மீன் விற்பனை செய்து கொண்டிருந்த போது அவரிடம் வந்த 2 இளைஞர்கள் 150 ரூபாய்க்கு மீன் வாங்கிக் கொண்டு, 2000 ரூபாய் கொடுத்து மீதி சில்லறை வாங்கிச் சென்றனர்.
அடுத்த அரை மணி நேரம் கழித்து ஏற்கனவே மீன் வாங்கிச் சென்ற அந்த இளைஞகளில் ஒருவன் மீண்டும் வந்து 150 ரூபாய்க்கு மீன் வாங்கிக் கொண்டு மற்றுமொரு 2000 ரூபாய் நோட்டை கொடுத்துள்ளான்.
அதற்கு குப்பம்மாள் இப்போதானே உங்களுக்கு சில்லறை கொடுத்தேன் என கேட்ட போது, அந்த பணம் செலவழிந்து விட்டதாகவும், தற்போது இந்த 2000 ரூபாய் நோட்டு மட்டும் தான் இருப்பதாகவும் அவன் தெரிவித்தான்.
அந்த ரூபாய் நோட்டு போலி என அறியாத குப்பம்மாள், 2000 ரூபாய் நோட்டுக்கும் சில்லறை கொடுத்து அனுப்பியுள்ளார். அதன் பின்னர் தன்னிடம் இருந்த 2 நோட்டுக்களையும் மாற்ற முயன்றபோது அது போலி நோட்டுக்கள் என தெரியவந்தது.
இது குறித்த அவர் திருவொற்றியூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். போலி ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட அந்த இளைஞர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.