இன்ஜினியரிங் கல்லூரிகளில் இனி யோகா கட்டாயம்…
நாடு முழுவதும் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், யோகா, விளையாட்டு அல்லது சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்டால் மட்டுமே பட்டம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் இன்ஜினியரிங் கல்லூரிகளில் என்எஸ்எஸ், என்சிசி மற்றும் கிராமங்களுக்கு சென்று மக்களுடன் பழகும் “உன்னத் பாரத் அபியான்” ஆகியவை செயல்பட்டன. இவை பட்டம் பெறுவதற்கு தகுதியானவை என அமல்படுத்தவில்லை.
ஆனால் தற்போது, இன்ஜினியரிங் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் பட்டம் பெறுவதற்கு இவை கட்டாயம் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான ஏஐசிடிஇயின் கட்டுப்பாட்டின் கீழ் நாடு முழுவதும் சுமார் 10 ஆயிரம் இன்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளன. இவற்றில், 18 லட்சம் மாணவ,மாணவிகள் படிக்கின்றனர். இவர்கள் இனி, யோகா, விளையாட்டு அல்லது சமூக நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்டவற்றில் ஏதாவது ஒன்றில், 25 சதவீத வருகை பதிவு இருக்க வேண்டும். இந்த செயல்பாடுகளுக்கு மதிப்பெண் கிடையாது. எனினும், வருகை பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக படிப்புடன் யோகா, விளையாட்டு அல்லது சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்டால் தான் பட்டம் பெற முடியும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.