சாத்தூர்

சாத்தூர் அருகே தனியார் தொழிற்சாலைக்கு விடுமுறை முடிந்து வேலைக்கு வந்த தொழிலாளி, அங்குள்ள தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

சாத்தூர் அருகே வன்னிமடை என்ற பகுதியில் தனியாருக்கு சொந்தமான அட்டை தொழிற்சாலை உள்ளது. இங்கு காகித கூழினை சேமிக்க தொட்டிகள் இருக்கின்றன. இதனை சுத்தம் செய்திட ஆலை தொழிலாளியான அமீர்பாளையத்தைச் சேர்ந்த பாண்டியராஜன் (22) என்பவர் வெள்ளிக்கிழமை தொட்டிக்குள் இறங்கினார்.

அப்போது தொட்டியில் விஷவாயு பரவி இருந்ததால் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பாண்டியராஜனின் உயிர் ஏற்கனவே பிரிந்து விட்டதாக தெரிவித்தனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதனை தொடர்ந்து அவரது உடல் பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த தொழிற்சாலைக்கு விடுமுறை விடப்பட்டு வெள்ளிக்கிழமைதான் திறக்கப்பட்டது. இதனால் காகித கூழ் தொட்டியில் விஷவாயு பரவியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இதுகுறித்து சாத்தூர் தாலுகா காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.