Asianet News TamilAsianet News Tamil

நான்கு வயது மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாயும் தற்கொலை; சாவுக்கு தூண்டிய கணவர் கைது…

Woman committed suicide Man arrested for killing her husband
Woman committed suicide Man arrested for killing her husband
Author
First Published Jul 27, 2017, 6:45 AM IST


நாமக்கல்

நாமக்கல்லில், மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்டார். தோட்ட வேலைக்கு உதவாத நீ உயிரோடு இருக்க தேவையில்லை என்று கூறி சாவுக்கு தூண்டிய கணவர் கைது.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை குண்டூர் நாட்டில் உள்ள தேனூர்பட்டியைச் சேர்ந்தவர் அன்புராஜ் (40). இவரது மனைவி ரோஜா (25). இவர்களுக்கு நான்கு வயதில் சௌந்தர்ராஜன் என்ற மகனும், ஒரு மாத பெண் கைகுழந்தையும் இருந்தது.

ரோஜா, கடந்த 24-ஆம் தேதி இரவு தனது நான்கு வயது மகன் சௌந்தர்ராஜனுக்கு விஷம் கொடுத்துவிட்டு, தானும் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டார்.

இதன்பேரில் கொல்லிமலை வாழவந்திநாடு காவலாளர்கள், அன்புராஜிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், நிகழ்வன்று தமது தோட்டத்தில் விளைந்திருந்த அன்னாசி பழங்களை பறிக்க தனது மனைவி ரோஜாவை அன்புராஜ் அழைத்துள்ளார். ஆனால், அவர் பெண் குழந்தை பிறந்து 40 நாள்கள் தான் ஆகிறது. எனவே, எனது உடல்நிலை சரியில்லாததால் அன்னாசி பழங்களை பறிக்க வரமுடியாது என தெரிவித்துள்ளார்.

இதைக் கேட்டு ஆத்திரமடைந்த அன்புராஜ் தோட்டத்தில் வேலையை கவனிக்காத நீ எனக்கு தேவையில்லை. நான் சந்தைக்கு சென்று வருவதற்குள் நீ உயிரோடு இருக்கக்கூடாது என திட்டி அடித்து உதைத்துள்ளார்.

இதனால் மனமுடைந்த ரோஜா மகன் சௌந்தர்ராஜனுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்” என்பது தெரிய வந்தது.

இதனையடுத்து விவசாயி அன்புராஜ் மீது நேற்று காவலாளர்கள் மனைவியையும், மகனையும் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios