woman attempt suicide with pour kerosene not tolerate loan interest

திண்டுக்கல்

கந்துவட்டி கொடுமை தாங்க முடியாமல் திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைப்பெற்றது. இதற்கு மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று மனு அளித்தனர். 

கடந்த பல மாதங்களாக ஆட்சியரகத்துக்கு வருபவர்கள் கையில் மண்ணெண்ணையை ஒளித்து வைத்துக்கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ளும் நினைப்போடு வருகின்றனர். இதனால், இவர்கள் அனைவரையும் தீவிர சோதனைக்கு பிறகே மனு அளிக்க ஆட்சியர் அலுவலகத்துக்குள் காவலாளர்கள் அனுமதித்தனர்.

இந்த நிலையில், ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு பெண் ஒருவர் திடீரென தன்னுடைய உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அருகில் நின்ற ஆண் ஒருவர், அந்த பெண் மீது தீயை பற்ற வைக்க முயன்றார். 

இதனைப் பார்த்த அதிர்ச்சி அடைந்த காவலாளர்கள் வேகமாக ஓடிச்சென்று அவருடைய கையில் இருந்த தீக்குச்சியை தட்டிவிட்டனர். பின்னர் அந்த பெண் மீது தண்ணீரை ஊற்றினர்.

இதனையடுத்து அந்தப் பெண்ணிடம் காவலாளர்கள் நடத்திய விசாரணையில், அவர் வடமதுரை அருகே உள்ள இ.பி. காலனியைச் சேர்ந்த டெய்சிராணி (38) என்பதும், உடன் வந்தவர் அவருடைய கணவர் சேகர் என்பதும் தெரியவந்தது. 

ஏன் தீக்குளிக்க முயற்சித்தேன் என்று அந்த பெண் கூறியது: "என்னுடைய கணவரின் தம்பியான தேவராஜ் எங்களிடம் பணம் கேட்டார். இதனால் எங்கள் வீட்டை ஒருவரிடம் அடமானம் வைத்து ரூ.10 இலட்சம் பெற்று அவரிடம் கொடுத்தோம்.

இந்தநிலையில் ரூ.25 இலட்சம் வட்டி தந்தால்தான் வீட்டின் பத்திரத்தை தருவதாக கடன் கொடுத்தவர் மிரட்டுகிறார். 

இதுகுறித்து எனது கணவரின் தம்பியிடம் கூறினால், அவர் கண்டுகொள்ளவே இல்லை. இதனால் கந்துவட்டி கேட்டு மிரட்டும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார். 

ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தீக்குளிக்க முயற்சித்ததும், கணவன் பற்ற வைக்க முற்பட்டதும் பெரும் பரபரப்பை ஏற்பட்டது.