ராஜிவ் காந்தி கொலை குற்றவாளி முருகனுக்கு பரோல் கிடைக்குமா? நீதிமன்றத்தில் இன்று விசாரணை
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியான நளினி , தனது கணவரும், சக குற்றவாளியுமான முருகனுக்கு உடல்நலக் குறைவால் 6 நாட்கள் பரோல் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
முருகனுக்கு பரோல்?
ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்று 31 ஆண்டு காலம் சிறையில் இருந்த பேரறிவாளன் கடந்த வாரம் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து மீதமுள்ள 6 பேரை விடுதலை செய்வது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ள நிலையில் தமிழக அரசும் ஆலோசனை நடத்தி வருகிறது. இந்தநிலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள நளினி தாக்கல் செய்துள்ள மனுவில், ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் எனக்கு தமிழக அரசு பரோல் வழங்கியதால் தாய் பத்மாவுடன் தங்கியுள்ளேன். ஆனால் வேலூர் சிறையில் இருக்கும் கணவர் முருகனுக்கு பரோல் வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.31 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவிக்கும் தங்களை விடுதலை செய்வது தொடர்பான தமிழ்நாடு அரசின் விடுதலை தீர்மானத்தின்படி இன்னும் விடுதலை செய்யப்படவில்லை என அந்த மனுவில் நளினி தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தில் இன்று விசாரணை
மேலும் மருத்துவக் காரணங்களுக்காக கணவர் முருகனை 6 நாட்கள் பரோலில் செல்ல அனுமதிக்கக் கோரி மே 26-ம் தேதி தானும், மே 21-ம் தேதி தனது தாய் பத்மாவும் தமிழக அரசிடம் மனு அளித்ததாகவும், அவை இதுவரை பரிசீலிக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார். தனது கணவர் முருகனை 6 நாட்கள் பரோலில் செல்ல அனுமதிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் நளினி கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. இந்த மனு மீது விசாரணைக்கு பிறகு முருகனுக்கு பரோல் கிடைக்குமா? என்ற கேள்விக்கு பதில் கிடைக்கும்
இதையும் படியுங்கள்