வாழைத் தோட்டங்களுக்குள் மீண்டும் புகுந்த காட்டு யானைகள்; மரங்களை சாய்த்தும், காலால் மிதித்து அட்டகாசம்...
தேனி
தேனியில் வாழைத் தோட்டங்களுக்குள் மீண்டும் புகுந்த காட்டு யானைகள் மரங்களை சாய்த்து, காலால் மிதித்து அட்டகாசத்தில் ஈடுபட்டன.
தேனி மாவட்டம், கூடலூரில் உள்ள வெட்டுக்காடு பகுதியில் உள்ளது சுருளியாறு மலை தொடர்ச்சி. இதன் அடிவாரத்தில் தென்னை, வாழை, மா, பலா உள்ளிட்ட தோட்டப் பயிர்கள் பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளன.
கடந்த ஐந்து நாள்களுக்கு முன்னர் சுருளியாறு மலையிலிருந்து, யானைகள் இறங்கி, வாழைத் தோட்டங்களில் புகுந்து மரங்களை சாய்த்து நாசம் செய்தன.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு ஜீவா, மனோகரன் ஆகியோரின் வாழைத் தோட்டங்களுக்குள் காட்டு யானைகள் மீண்டும் புகுந்தன.
அந்த யானைகள் வாழை மரங்களை சாய்த்து, வாழைப் பழ தார்களை சாப்பிட்டு, நிலத்தில் போட்டு மிதித்து அட்டகாசத்தில் ஈடுபட்டன.
காலையில் மக்கள் நடமாட்டம் வரும்வரை யானைகள் வாழைத் தோட்டத்திற்குள்ளேயே இருந்து வாழைகளை நாசம் செய்தன.
"பயிர்கள் சேதமானதால் தங்களுக்கு இழப்பீடு வேண்டும் என்றும், யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியருக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.