Wild elephants enter into village for food shortages

நீலகிரி

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கூடலூர் பகுதியில் உள்ள வனப்பகுதியில் பசுந்தீவனத் தட்டுப்பாடு ஏற்பட்டதால் காட்டுயானைகள் கிராமத்திற்குள் தொடர்ந்து வருகைத் தந்து தென்னை, பாக்கு மரங்களை கொஞ்சம் தின்றும், நிறைய சாய்த்தும் போட்டதால் பல இலட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

நீலகிரி மாவட்டம், கூடலூர் – முதுமலை புலிகள் காப்பக எல்லையில் தொரப்பள்ளி, குனில், ஏச்சம்வயல், புத்தூர்வயல், அள்ளூர்வயல் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.

முதுமலை வனப்பகுதியில் பார்த்தீனியம் செடிகள் செழித்து வளர்ந்துள்ளது. பசுந்தீவன தட்டுப்பாட்டில் இருக்கும் காட்டு யானைகள், மான்கள் மாலை நேரமானதும் வனங்களை விட்டு வெளியேறி அருகே உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விடுகின்றன.

பின்னர் அங்குள்ள வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்ட விவசாய பயிர்களை விடிய, விடிய முகாமிட்டு தின்று வருகிறது. காட்டு யானைகளின் தொடர் வருகையால் கிராமப்புற விவசாயிகள், மக்கள் தினமும் அச்சமுடன் வாழ வேண்டிய நிலை உள்ளது. மேலும், விவசாய பயிர்களும் சேதம் அடைந்து வருகிறது.

எனவே, காட்டு யானைகளின் வருகையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்தப்போவதாக கிராம மக்கள் சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தனர்.

இதனையொட்டி காவலாளர்கள், வனத்துறையினர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி காட்டு யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்கிறோம் என்று உறுதியளித்தனர்.

பின்னர், முதுமலையில் இருந்து கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு விவசாய பயிர்களை சேதப்படுத்தும் காட்டு யானைகளை விரட்டும் பணி சில நாள்களாக நடைபெற்று வந்தது. இருப்பினும் காட்டு யானைகள் வருகையை வனத்துறையால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் கும்கி யானைகளை கொண்டு காட்டு யானைகளை விரட்டும் பணி நிறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து காட்டு யானைகள் தினமும் கிராமங்களுக்குள் நுழைந்து தென்னை, பாக்கு மரங்களை வேரோடு சரித்துப் போட்டுத் தின்று அட்டகாசம் செய்து வருகின்றன. நள்ளிரவு என்பதால் விவசாயிகள் காட்டு யானைகளை விரட்ட முடியாமலும் அச்சத்துடன் வீடுகளுக்குள் முடங்கி கிடக்க வேண்டிய நிலை காணப்படுகிறது. குறிப்பாக அதிகபட்சமாக தென்னை மரங்களை விவசாயிகள் இழந்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாகவே காட்டுயானையால் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டுள்ள தென்னை விவசாயிகள் கவலையுடன் தெரிவித்துள்ளனர். இது சம்பந்தமாக முதுமலை வனத்துறையிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை என விவசாயிகள், கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.