விதவைச் சான்றிதழ் பெற்று அரசு வேலையில் சேர்ந்த மனைவி; 'நான் சாகவில்லை' என்று ஆட்சியரிடம் போட்டுக் கொடுத்த கணவன்...
திருநெல்வேலி
விதவைச் சான்றிதழ் பெற்று அரசு பணியில் சேர்ந்த மனைவி குறித்து அறிந்து கொண்ட கணவன், 'நான் உயிருடன் தான் இருக்கிறேன்' என்றும் 'தனது மனைவி குறுக்கு வழியில் அரசு பனிக்கு சேர்ந்துவிட்டார்' என்று ஆட்சியர் ஷில்பாவிடம் புகார் கொடுத்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் நகர சபைக்குட்பட்டது கிருஷ்ணாபுரம் முப்புடாதி. இங்குள்ள அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த வேல்சாமி மகன் கார்த்திகேயன். இவருக்கும், சங்கரன்கோவில் தாலுகாவில் உள்ள இராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த வள்ளிக்கண்ணு மகள் கோமதிக்கும் திருமணம் நடந்தது.
கடந்த இரண்டு வருடங்களாக கணவன் - மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். மேலும், கார்த்திகேயனிடம் இருந்து விவகாரத்து கேட்டு சங்கரன்கோவில் நீதிமன்றத்தில் கோமதி வழக்கு தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கடந்த வருடம் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட அலுவலகத்தில் அங்கன்வாடி அமைப்பாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு நடந்தது. இதில், கோமதியும் பங்கேற்றார். அப்போது அவர் ராமநாதபுரம் கிராமம் அங்கன்வாடி அமைப்பாளராக தேர்வாகி தற்போது பணிபுரிந்து வருகிறார்.
இதுபற்றி அறிந்த கார்த்திகேயன் தனது மனைவி பணி நியமனம் பெற்றது குறித்து தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கேட்டிருந்தார். அதில் கோமதி தனது கணவர் இறந்துவிட்டார் என்று கூறி விதவைச் சான்றிதழ் பெற்று அதன் முன்னுரிமையில் பணி நியமனம் பெற்றதை தெரிந்து கணவன் அதிர்ச்சி அடைந்தார்.
திருநெல்வேலியில் நடந்த மனு நீதிநாள் முகாமில் ஆட்சியர் ஷில்பாவிடம், இதுகுறித்து கார்த்திகேயன் புகார் கொடுத்தார். அந்த புகாரில், 'நான் உயிருடன் தான் இருக்கிறேன்' என்றும் 'தனது மனைவி குறுக்கு வழியில் அரசு பனிக்கு சேர்ந்துவிட்டார்' என்றும் தெரிவித்துள்ளார்.
அதற்கு ஆட்சியர், "கணவன் உயிருடன் இருக்கும்போதே விதவை சான்றிதழ் பெற்று அரசு பணியில் சேர்ந்தாரா?" என்று அதிர்ச்சிய்டைந்து, "இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.