Asianet News TamilAsianet News Tamil

கருணாநிதி விருப்பத்திற்கு எதிராக திமுக செயல்படுவது ஏன்? பாஜக கேள்வி!

கருணாநிதி விருப்பத்திற்கு எதிராக திமுக செயல்படுவது ஏன் என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது

Why is DMK working against Karunanidhi wishes aks bjp narayanan thirupathy smp
Author
First Published Nov 17, 2023, 8:44 PM IST

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்று குற்றம்சாட்டி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், 10 சட்ட மசோதாக்களுக்கு அரசிடம் விளக்கம் கேட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார். இந்த மசோதாக்கள் குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்குமாறு ஆளுநர் கூறியிருக்கிறார்.

ஆனால், ஆளுநர் திருப்பி அனுப்பிய பத்து மசோதாக்களும் திருத்தமின்றி மீண்டும் அப்படியே நிறைவேற்றி அவருக்கு மீண்டும் அனுப்பப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்காக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தொடரை சபாநாயகர் அப்பாவு கூட்டியுள்ளார்.

இந்த நிலையில், மறைந்த முதல்வர் கருணாநிதி விருப்பத்திற்கு எதிராக திமுக செயல்படுவது ஏன் என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தனது எக்ஸ் பக்கத்தில், “பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை முதல்வருக்கு வழங்கும் மசோதாக்களை  ஆளுநர் அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளதையடுத்து, நாளை சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்டி, மீண்டும் அந்த தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது தமிழக அரசு.

"1994ம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதியன்று தமிழ்நாட்டில் அப்போதிருந்த 13 பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பு,  ஆளுநரிடம் இருந்ததை மாற்றி முதல்வர் தான் அந்த பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்றியது அன்றைய அதிமுக அரசு. மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டால் அந்தக்காலத்தில் முதல்வர் இருக்க மாட்டாரே, அப்போது யார் பல்கலைக்கழக துணை வேந்தராக இருப்பார்கள் என்ற கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் கேட்கப்பட்டது.

 

 

தமிழக சட்டப்பேரவையில், திமுக சார்பில் அந்தச் சட்டம் தேவையற்றது என்ற கருத்து தெரிவிக்கப்பட்டது" என்று திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநநிதி குறிப்பிட்டுள்ளார். (ஆதாரம்: நெஞ்சுக்கு நீதி, நான்காம் பாகம், பக்கம் 512).

மேலும், 30, ஜூலை 1996ம் ஆண்டு அன்று தமிழக சட்டசபையில், அன்றைய கல்வி துறை அமைச்சரும், திமுக வின்  நீண்ட கால பொதுச்செயலாளருமான பேராசிரியர் அன்பழகன் அதிமுக கொண்டு வந்த சட்டத்தை திரும்ப பெற்றதோடு, ஆளுநரே இனி வேந்தராக தொடருவார் என்றும், முதலமைச்சர் வேந்தரானால் பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி அதிகாரம் கேள்விக்குறியாகி விடும் என்பதோடு, பல்கலைக்கழகங்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கு குந்தகம் விளைவிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி 'தேவையற்ற சட்டம்' என்று சொன்னதை மீறி சட்டம் கொண்டு வருவது நியாயமா? நீதியா? என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்க வேண்டும். 

சுகாதாரத் துறையில் மாற்றம்: மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பெருமிதம்!

மேலும், மாநிலத்தில், குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டால் அந்தக்காலத்தில் வேந்தர்  இருக்க மாட்டாரே, அப்போது யார் வேந்தராக இருப்பார்கள்? மாணவர்களின் எதிர்கால நலனில் அக்கறை இல்லாமல் இருக்கிறீர்களே? என்று, இன்று கருணாநிதி அவர்கள் இருந்திருந்தால் கேட்டிருப்பார் அல்லவா என்ற சிந்தனையில்லாமல் மீண்டும் இந்த மசோதாவை கொண்டு வருவது சரியா என்று முதலமைச்சர் ஸ்டாலின் எண்ணிப்பார்க்க வேண்டும்.

அதேபோல், முதலமைச்சர் வேந்தரானால் பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி அதிகாரம் கேள்விக்குறியாகி விடும் என்பதோடு, பல்கலைக்கழகங்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கு குந்தகம் விளைவிக்கும் என்ற அன்றைய முதல்வர் கருணாநிதி அவர்களின் தலைமையிலான தி மு க அரசின் முடிவிற்கு எதிராக ஒரு சட்டத்தை கொண்டு வருவது நியாயமா? நீதியா? இது தான் முன்னாள் முதல்வர் கருணாநிதியை பின்பற்றும் ஆட்சியா என்று மக்கள் கேட்பார்கள் என்பதை மு.க.ஸ்டாலின் உணர வேண்டும். மறைந்த முதல்வர் மு கருணாநிதியின் விருப்பத்திற்கெதிராக இன்றைய திமுக அரசு செயல்படுவது என்? என்று வியப்போடு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் தமிழக மக்கள்!” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios