தமிழகத்தின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் யார்?
கோவை ஷர்மிளா விவகாரத்துக்கு தமிழகத்தின் முதல் பேருந்து ஓட்டுநர் தொடர்பான தேடல்கள் அதிகரித்துள்ளன
திமுக துணை பொதுச் செயலாளரும், எம்.பியுமான கனிமொழி, நேற்று முன் தினம் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கோவை சென்றார். அப்போது, தனியார் பேருந்து பெண் பேருந்து ஓட்டுநரான ஷர்மிளாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த அவர், காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து பீளமேடு பகுதி வரை பேருந்திலேயே பயணித்தார்.
இந்த சந்திப்பு நடந்த சில மணி நேரங்களிலேயே பெண் ஓட்டுநர் ஷர்மிளா பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும், விளம்பரத்துக்காக அவர் பேருந்தில் பிரபலங்களை ஏற்றுவதால் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த சம்பவம் தொடர்பாக, பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா, நடத்துனரான மற்றொரு பெண் அன்னத்தாய், தனியார் பேருந்து நிர்வாகம் ஆகியோர் தரப்பில் தனித்தனியாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அலெர்ட்..! குடையை மறக்காதீங்க.! இன்று முதல் 4 நாட்களுக்கு மழை - எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
இதுஒருபுறமிருக்க கோவை சேர்ந்த ஷர்மிளா தமிழகத்தின் முதல் பேருந்து ஓட்டுநர் என்றும் சிலர் கூறினர். ஆனால், தமிழகத்தின் முதல் பேருந்து ஓட்டுநர் கோவை சேர்ந்த ஷர்மிளா அல்ல; தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா ஏன் ஆசியாவிலேயே முதல் பெண் பேருந்து ஓட்டுநர் கன்னியாகுமரியை சேர்ந்த வசந்தகுமாரி என்பவர். ஷர்மிளா, கோவை நகரத்தின் முதல் பெண் ஓட்டுநர்.
தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் 1993 ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்த வசந்தகுமாரி, தனது 14ஆவது வயதிலேயே வண்டி ஓட்டப் பழகியவர். வண்டி ஓட்டுவதன் மீதான ஆர்வத்தில் இளம் வயதிலேயே வண்டி ஓட்ட கற்ற வசந்தகுமாரியின் வாழ்க்கை, கடுமையான போராட்டங்கள் நிறைந்தது. பெற்றோரை இழந்த அவர், உறவினர்கள் வீட்டில் வசித்து வந்ததாகவும், தனது 19 வயதில், நான்கு பெண் குழந்தைகளுடன் மனைவியை இழந்த ஒருவருக்கு இரண்டாவதாக தன்னை திருமணம் செய்து வைத்ததாகவும் பல்வேறு பேட்டிகளில் அவர் தெரிவித்துள்ளார்.
அதன்பிறகு, இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்னர், கன்னியாகுமரியில் உள்ள மகிளா மன்றத்தில் இணைந்து, கனரக வாகன லைசன்ஸ் பெற்று பேருந்து ஓட்டுனரானார். பலமுறை அவர் பணிக்காக நிராகரிக்கப்பட்டலும், தொடர்ந்து மனு அளித்து, அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவை சந்தித்தும் தன் கோரிக்கையை வைத்தார். ஜெயலலிதா தலையீட்டின் பேரில், அவருக்கு அரசு போக்குவரத்து கழகத்தில் பணி ஒதுக்கப்பட்டு வெற்றிகரமாக அரசு பேருந்து ஓட்டுனரானார். பெண் சாதனையாளருக்கான பல்வேறு விருதுகளையும் அவர் வென்றுள்ளார் என்பது குறிப்பிட்டத்தக்கது.