பாறைகளின் பின்னால் ஒளிந்து கொண்டு உயிர் பிழைத்தோம்! காட்டுத்தீயில் தப்பித்த மாணவி பேட்டி!
காட்டு தீ எங்கள் பக்கம் பரவி வருவதைப் பார்த்த நாங்கள், பாறைகளின் பின்னால் ஒளிந்து கொண்டோம்; அதனால் நாங்கள் உயிர்பிழைத்தோம் என்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி விஜயலட்சுமி கூறினார்.
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியின் கொழுக்கு மலைக்கு திருப்பூரில் இருந்தும் சென்னையில் இருந்து 26 பெண்கள், 8 ஆண்கள், 3 குழந்தைகள் உள்பட 40 பேர் இரு குழுக்களாக சென்றுள்ளனர். இவர்கள் இன்று திங்கள்கிழமை திரும்ப திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மலை ஏறி திரும்பும் போது அவர்கள் காட்டுத்தீயில் சிக்கியுள்ளனர். இதையடுத்து அவர்கள் தனிதனியாக பிரிந்து சென்றுள்ளனர். அதில் இதுவரை 27 பேர் லேசான மற்றும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதுவரை மீட்கப்பட்டவர்கள் அனைவரும் போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 8 பேர் மட்டும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் ட்ரெக்கிங் சென்ற சென்னையைச் சேர்ந்த 6 பேரும், ஈரோட்டைச் சேர்ந்த 3 பேரும் தீயில் கருகி உயிரிழந்ததாக அதிகாரப்பூர்மாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் அறிவித்துள்ளார். தீயில் இருந்து தப்பிக்க உயிரிழந்த 9 பேரும் அங்கிருந்த மிகப் பெரிய குழியில் குதித்ததால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. காட்டு தீயில் சிக்கியவர்களை மீட்பதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
எங்கள் குழந்தைகளின் ஆர்வத்தால்தான் ட்ரெக்கிங் அனுப்பி வைத்தோம். ஆனால், இப்படியாகும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்றும், தீயில் சிக்கியுள்ள எங்கள் குழந்தைகள் பத்திரமாக வீடு திரும்ப பிரார்த்தனை செய்து வருவதாகவும் பெற்றோர்கள் கூறுகின்றனர்.
காட்டு தீயில் சிக்கி, பத்திரமாக மீட்கப்பட்ட மீட்கப்பட்டு மருத்துவமனையில் உள்ள மாணவி விஜயலட்சுமி கூறும்போது, காட்டுத்தீ எங்கள் பக்கம் வருவதைப் பார்த்ததும், நாங்கள் பாறைகளின் பின்னால் ஒளிந்து கொண்டோம். அதனால் நாங்கள் உயிர் பிழைத்தோம் என்று கூறினார்.