தமிழக உயர்கல்வித்துறை ராஜ கண்ணப்பனுக்கு ஒதுக்கப்பட்டதை கண்டு சீனியர்கள் பலரும் ஸ்தம்பித்து போயுள்ள நிலையில், அதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகியுள்ளது

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் கால அவகாசமும் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, பொன்முடி தனது அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் உடனடியாக இழந்தார்.

இதையடுத்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு பொன்முடி வகித்து வந்த உயர் கல்வித்துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டது. உயர்கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் கூடுதலாக அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கும், ராஜ கண்ணப்பன் வசம் இருந்த காதி மற்றும் கிராம தொழில்கள் துறை, கைத்தறித்துறை அமைச்சர் காந்திக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டது.

அமைச்சர் பொன்முடி வழக்கில் தீர்ப்பு வந்தவுடனேயே உயர்கல்வித்துறையானது பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. மேலும், திமுகவில் உள்ள அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என பலரும் அந்த துறையை பெற உடனடியாக தங்களது சோர்ஸுகள் மூலம் காய் நகர்த்தினர். ஆனால், அனைவருக்கும் ஏன் ராஜ கண்ணப்பனுக்கே சர்ப்ரைஸ் அளிக்கும் வகையில் அவருக்கு உயர்கல்வித்துறையை ஒதுக்கினார் முதல்வர் ஸ்டாலின்.

இதன் பின்னணி குறித்து விசாரிக்கையில், உயர் கல்வித்துறைக்கு பலரும் முட்டி மோதியதால் குழப்பம் அடைந்த ஸ்டாலின், தனக்கு நெருக்கமான அமைச்சர்கள், நிர்வாகிகள், குடும்பத்து உறுப்பினர்களிடம் ஆலோசனை கேட்டதாக கூறுகிறார்கள். அப்போது பொன்முடி உடையார் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அச்சமூகத்தை சேர்ந்த யாருக்காவது அமைச்சர் பதவி அளிக்கலாம் என ஆலோசனைகள் தரப்பட்டுள்ளன. ஸ்டாலின் குடும்பத்தில் வேறு சிலரது பெயர்கள் தரப்பட்டுள்ளன.

ஆனால், தேர்தல் எதிர்வரவுள்ளதால் குழப்பம் ஏற்படா வண்ணம் அமைச்சர் செந்தில் பாலாஜி விஷயத்தில் எடுக்கப்பட்டது போலவே முடிவெடுக்க ஸ்டாலின் விரும்பியதாக தெரிகிறது. எனவே, உதயநிதி ஸ்டாலினின் கருத்தை பெற மூத்த நிர்வாகிகள் சிலர் ஸ்டாலினுக்கு யோசனை வழங்கியுள்ளனர். அதன்படி, உதயநிதி கருத்தை கேட்ட ஸ்டாலினுக்கு முதலில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஏனெனில் அவர் சொன்னது சமீபத்தில் அவருடன் நெருக்கமான ராஜ கண்ணப்பனின் பெயர்.

விவசாயத் தொழிலாளருக்கு விடிவுகாலம் வருமா: வெண்மணி நினைவு நாளில் ரவிக்குமார் எம்.பி. கேள்வி!

திமுக அமைச்சரவையில் முதன்முறையாக டீப்ரோமோட் செய்யப்பட்டவர் ராஜ கண்ணப்பன். தொடர்ந்து பல்வேறு புகார்கள் காரணமாக போக்குவரத்து துறை பறிக்கப்பட்டு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அளிக்கப்பட்டது. எனவே, அவரது பெயரை உதயநிதி சஜஸ்ட் செய்தது முதலில் ஸ்டாலினுக்கு அதிர்ச்சி தானாம். ஜெயலலிதாவுக்கே டஃப் கொடுத்த ராஜ கண்ணப்பனிடன் உஷாராக இருக்க வேண்டும் என கட்சியினருக்கு ஏற்கனவே ஸ்டாலின் அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியான நிலையில், அதிமுக்கியத்துவம் வாய்ந்த துறையை அவருக்கு ஒதுக்கலாமா என உதயநிதியிடம் ஸ்டாலின் பலமுறை கேட்டதாக கூறுகிறார்கள்.

ஆனால், தனது முடிவில் விடாப்படியாக இருந்த உதயநிதி, யாதவ சமூகத்தை சேர்ந்த ராஜ கண்ணப்பன், தன் சமூகத்தில் இன்னும் செல்வாக்காகவே இருக்கிறார். பொருளாதார பின்புலம் உள்ளது. நிர்வாகத்திறனும் அவருக்கு உள்ளது. மக்களவை தேர்தலில் தென் மாநிலங்களில் வலுவாக பிரசாரம் செய்ய வேண்டியுள்ளது. எனவே, ராஜ கண்ணப்பன் சரியான சாய்ஸாக இருக்கும் என உதயநிதி எடுத்துச் சொல்லியுள்ளார்.

தொடர்ந்து, ராஜ கண்ணப்பன் மீது ஏதேனும் புகார்கள், பழைய சம்பவங்கள் குறித்து உளவுத்துறையிடம் ஸ்டாலின் கேட்டறிந்துள்ளார். அவர்களும் எதுவும் நெகட்டிவாக சொல்லாத காரணத்தால் ராஜ கண்ணப்பனின் பெயரை ஸ்டாலின் டிக் அடித்ததாக கூறுகிறார்கள்.