மாயமான மகளுக்கு என்ன ஆனதோ? ஏது ஆனதோ? வேதனையில் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை...
தூத்துக்குடி
தூத்துக்குடியில் மாயமான மகளுக்கு என்ன ஆனதோ? ஏது ஆனதோ? என்ற வேதனையில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரை அடுத்த வீரபாண்டியன்பட்டினம் கிங் காலனியைச் சேர்ந்தவர் குமாரவேல் (51). இவர் அங்குள்ள உணவகத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி மார்க்ரெட்.
இவர்களுக்கு சதீஷ் (27), செல்வம் (25) ஆகிய 2 மகன்களும், சந்தன வினிஷா (23) என்ற மகளும் உள்ளனர். சதீஷ் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். செல்வம் கூலி வேலை செய்து வருகிறார்.
கடந்த மாதம் 16–ஆம் தேதி, வீட்டில் இருந்த சந்தன வினிஷா திடீரென்று மாயமானார். இதுகுறித்து குமாரவேல் திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின்பேரில் காவலாளர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மார்க்ரெட்டுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு அவர், பக்கத்து ஊரான அடைக்கலாபுரம் பிலோமிநகரில் உள்ள தன்னுடைய தங்கையின் வீட்டில் வசித்து வருகிறார். மகள் மாயமானதில் இருந்து மகளுக்கு என்ன ஆனதோ? ஏது ஆனதோ? என்று நினைத்து குமாரவேல் மனவேதனையில் இருந்தார்.
இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குமாரவேல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மறுநாள் காலையில் மார்க்ரெட் தனது வீட்டுக்கு சென்றபோது அங்கு கணவர் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறினார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், திருச்செந்தூர் தாலுகா காவலாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தற்கொலை செய்த குமாரவேலின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.