Weaving manufacturers held in protest and opposing GST

திருப்பூர்

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று இரண்டாவது நாளாக சிறு நெசவு உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் ரூ.10 இலட்சம் வரையிலான நெசவு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு ஜூலை 1–ஆம் தேதி அமல்படுத்தப்பட இருக்கிறது. இந்த வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் துணிகளின் விலை உயரும் என்பதால் மக்கள் பாதிப்படுவார்கள். எனவே ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதியில் உள்ள சிறு நெசவு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மூன்று நாள்கள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர்.

அதன்படி வெள்ளக்கோவில் பகுதியில் உள்ள சிறு நெசவு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் நேற்று முன்தினம் முதல் தங்களது விசைத் தறிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் நேற்று இரண்டாவது நாளாக நடைப்பெற்றது.

இதுகுறித்து வெள்ளக்கோவில் வட்டார சிறு நெசவு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொருளாளர் ஏ.தேசீகன் கூறியது:

நெசவுத் துறைக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. எனவே நெசவு உற்பத்திக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து வரி விலக்கு அளிக்கக்கோரி 27–ஆம் தேதி முதல் எங்களது விசைத் தறிகளை நிறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இந்த போராட்டம் நாளை (இன்று) நடைபெறும்.

வெள்ளக்கோவில் வட்டாரத்தில் 1500 விசைத்தறிகள் உள்ளன. இதில் நேரடியாக ஐந்தாயிரம் பேரும், மறைமுகமாக ஐந்தாயிரம் பேரும் வேலை செய்து வருகிறார்கள்.

தற்போது 1500 விசைத் தறிகளும் நிறுத்தப்பட்டுள்ளதால் தினமும் ரூ.10 இலட்சம் வரையிலான நெசவு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, நெசவு உற்பத்திக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.