Weather Forecast Center Warning
ஆந்திரா, தெலங்கானா, கர்நாடக மாநிலங்களில் வீசும் வெப்பக்காற்று காரணமாக, வேலூர், தருமபுரி, திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் வெயி 105 பாரன்ஹீட் டிகிரியை தாண்டும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அக்னி நட்சத்திரம் தொடங்க இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியுள்ளது. இந்த நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும் என்ற செய்தி மேலும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திரா, தெலங்கானா, கர்நாடக மாநிலங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தெலங்கானா மாநிலம் அடிலாபாத்தில், அதிகபட்சமாக 111 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது.
அதனால், அந்திரா, தெலங்கானா, கர்நாடக மாநிலங்களில் வெப்பக்காற்று வீசுகிறது. இந்த வெப்பக்காற்று, தமிழகம் நோக்கி வீசி வருகிறது. இதன் காரணமாக, அடுத்த இரண்டு நாட்களுக்கு வேலூர், தருமபுரி, திருச்சி, சேலம் ஆகிய 4 மாவட்டங்களில் வெப்பநிலை 105.8 டிகிரி பாரன்ஹீட் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், திருச்சி, வேலூர், சேலம் பரமத்தி, மதுரை, தருமபுரி, நாமக்கல் ஆகிய எட்டு மாவட்டங்களில் நேற்று மட்டும் வெயில் 100-யைத் தாண்டி உள்ளது.
