எங்களுக்கென்று புதிதாக சாராயக் கடை அமைக்கணும் – 50-க்கும் மேற்பட்ட பெருங்கொளத்தூர் கிராம மக்கள் கோரிக்கை மனு…
திருவண்ணாமலை
பெருங்கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் பகுதியில் டாஸ்மாக் சாராயக் கடை அமைக்க வேண்டும் என்று ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நேற்று நடைப்பெற்றது.
இதற்கு ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். அப்போது ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத் திறனாளிகளிடம் இருந்தும், கூட்டரங்கில் மக்களிடம் இருந்தும் கோரிக்கை மனுக்களை ஆட்சியர் பெற்றுக் கொண்டார்.
இதில் கல்வி உதவித்தொகை, வங்கிக்கடன் உதவி, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, வீட்டு மனைப்பட்டா என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 340 மனுக்கள் பெறப்பட்டன.
மக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஆட்சியர் வழங்கி, மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
மேலும், நிலுவையில் உள்ள மனுக்களின் மீதான தொடர் நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
இந்தக் கூட்டத்தில் தண்டராம்பட்டு தாலுகா பெருங்கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் 50–க்கும் மேற்பட்டோர் ஆட்சியரிடம் மனு ஒன்றை கொடுத்தனர்.
அதில், “எங்கள் கிராமம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் அரசு டாஸ்மாக் சாராயக் கடை எதுவும் இல்லை. நாங்கள் குடிப்பதற்கு சுமார் 20 கிலோ மீட்டர் சென்றே குடிக்கவேண்டியதாய் இருக்கிறது.
எங்கள் கிராமத்தின் சுற்றுப் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனையும் நடைபெற்று வருகிறது. இதனால் மக்களுக்கு உடல்நல கேடு ஏற்படுகிறது.
எனவே, எங்கள் கிராமத்தில் டாஸ்மாக் சாராயக் கடை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.