”முல்லை பெரியாறு அணையில் தண்ணீர் திறந்து விடுங்க” - விவசாயிகள் போராட்டத்தால் 5 மணி நேரமாக அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்...!
முல்லைப்பெரியாறு அணையிலிருந்து பாசனத்திற்காக மேலூர் கால்வாய்க்கு தண்ணீர் திறக்க வேண்டும் என கோரி திருச்சி - மதுரை சாலையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுமார் 5 மணி நேரமாக நடைபெற்று வரும் இந்த போராட்டத்தால் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
முல்லைப்பெரியாறு அணையிலிருந்து பாசனத்திற்காக மேலூர் கால்வாய்க்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர்.
ஆனால் அரசு நடவடிக்கை எடுக்காததால், இன்று சென்னை - கன்னியாகுமரி சாலையில் மினி கோயில் பகுதியில் சுமார் 5 ஆயிரம் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பி.டி.ஆர் மற்றும் தந்தை பெரியார் கால்வாய்களுக்கு தண்ணீர் திறப்பதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
டி.டி.வி தினகரன் மற்றும் இடதுசாரி கட்சிகளை சேர்ந்தவர்களும் சாலை மறியலில் பங்கெடுத்துள்ளனர்.
நான்கு வழிச்சாலையில் சாமியானா பந்தல் போட்டு சக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு சாப்பாடு தண்ணீர் வழங்கி வருகின்றனர். இதனால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர், தஞ்சை செல்லும் பேருந்துகள் சிவகங்கை வழியாக திருப்பி விடப்படுகின்றன. திருச்சியில் இருந்து செல்லும் பேருந்துகள், கொட்டாம்பட்டி, நத்தம் வழியாக மதுரைக்கு திருப்பி விடப்படுகின்றன.