வாட்டர் கேன்கள் அதிரடி விலை உயர்வு - பொதுமக்கள் கடும் அதிர்ச்சி!
நாடு முழுவதும் கடந்த 1ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி ஒவ்வொரு பொருட்களுக்கும் 3 முதல் 28 சதவீதம் வரை தனித்தனியாக வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக இன்று தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. இதனால், பொதுமக்கள் காலி குடங்களுடன் தெரு தெருவாக அலைந்து தண்ணீர் பிடிக்கும் அவல நிலை உள்ளது. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு, சில தனியார் நிறுவனங்கள், கேன்களில் தண்ணீர் நிரப்பி விற்பனை செய்து வருகிறது.
இதில் சுத்திகரிக்கப்படாத தண்ணீரை விற்பனை செய்யும் போலி நிறுவனங்களை வருவாய் துறை மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் கண்டறிந்து, அந்த நிறுவனங்களுக்கு சீல் வைத்துள்ளனர். சில நிறுவனங்கள் அங்கீகாரம் பெற்று, தண்ணீர் விற்பனை செய்து வருகிறது.
இதுபோன்று விற்பனை செய்யும் கேன்களின் விலை ரூ.3 முதல் ரூ.5 வரை மட்டுமே. இதனை வியாபாரிகள், லோடு ஆட்டோக்களில் கொண்டு வந்து, குடியிருப்பு மற்றும் வீடுகள், கடைகள், கம்பெனிகளுக்கு ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனை செய்கின்றனர்.
தற்போது இந்த குடிநீர் கேன்களின் விலை சராசரியாக ரூ.50 வரை உயர்ந்துள்ளது. இதனால், மக்கள் கடும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளனர்.
இதுபற்றி குடிநீர் விற்பனை செய்யும் நிறுவன உரிமையாளர்களிடம் கேட்டபோது, தண்ணீர் விலையை நாங்கள் உயர்த்துவது வேதனையாகவே உள்ளது. ஆனால், எங்களுக்கு தேவைப்படும் மூலப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால், நாங்களும் விலையை உயர்த்தும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
இதேபோல் பெட்டிகடைகளில் வாட்டர் பாக்கெட் 30 பைசா முதல் 40 பைசா வரை வாங்கப்படுகிறது. அதனை ரூ.2க்கு விற்பனை செய்கிறார்கள். தற்போது ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதால், ஒரு வாட்டர் பாக்கெட்டின் விலை ரூ.3க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடும் வெயிலில் செல்லும் மக்கள், தாகத்துக்கு பெட்டி கடைகளில் வாட்டர் பாக்கெட் வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால், அவர்களுக்கு இந்த விலை உயர்வால், பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என்பதை அரசு கவனிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.