திருவாரூர் மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்களை வேருடன் முற்றிலும் அகற்றும் பணி போர்க் கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது என்று மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
திருவாரூர், கோட்டூர், இருள்நீக்கி, பனையூர் உள்ளிட்ட இடங்களில் சீமைக்கருவேல மரங்களை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணியை நேற்று ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
“உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவுபடி திருவாரூர் மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. மாவட்டத்திலுள்ள ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, வனத் துறை, வேளாண்மைத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, இந்து சமய அறநிலையத் துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட அனைத் துறையினரும் தங்களது துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் சீமைக்கருவேல மரங்களை முழுமையாக அகற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது.
நெடுஞ்சாலை சார்பில் ஏரி, ஆறு, குளம் குட்டைகள் உள்ளிட்ட அனைத்து பொது இடங்களிலும் சீமைக்கருவேல மரங்களை வேருடன் முற்றிலும் அகற்றும் பணி போர்க் கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
தனியார் இடங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை முழுமையாக அகற்ற வேண்டும். அகற்றாவிட்டால் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அகற்றி அதற்கான செலவு இரண்டு மடங்காக வசூலிக்கப்படும்.
சீமைக்கருவேல மரங்களை முழுமையாக அகற்றுவதால் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதுடன் மண் வளத்தையும் பேணி காக்க முடியும். இதனால், விவசாயம் செழிக்கும்.
சீமைக்கருவேல மரங்களை ஒழிப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளம்பரங்கள், பேரணிகள் நடத்த வேண்டும்” என்று ஆட்சியர் தெரிவித்தார்.
