கடல் நீர் புகாமல் இருக்க கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் - கிராம மக்கள் தீர்மானம்...
கடலூர்
கொள்ளிடம் ஆற்றில் கடல் நீர் புகாமல் இருக்க அளக்குடி, கரைமேடு கடைமடை பகுதியில் தடுப்பணை கட்ட வேண்டும் என்று கிராம மக்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் கடல் நீர் புகுந்து வருவதால் நிலத்தடி நீர் உப்பாகி வருகிறது. இதனால், விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. மேலும் குடிநீரை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கிராம மக்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர்.
இதனையடுத்து கொள்ளிடக் கரையோர கிராம மக்கள், விவசாயிகள், இளைஞர்கள், சிதம்பரம் வர்த்தக சங்கத்தினர் சார்பில் நேற்று கொள்ளிடம் கிராமத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்தில், "கொள்ளிடம் ஆற்றில் கடல் நீர் புகாமல் இருக்க அளக்குடி, கரைமேடு கடைமடை பகுதியில் தடுப்பணை கட்ட வேண்டும்,
குமாரமங்கலம், ஆதனூர் இடையே கதவணை கட்டும் திட்டத்தை தொடங்க வேண்டும்,
இந்த கோரிக்கை குறித்து முதலமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்துவது" போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் ஜெகசண்முகம், ரகுராமன், சதீஷ் குமார், சந்திரபாண்டியன், சூரியமூர்த்தி, நீலமேகம் மற்றும் வர்த்தக சங்கத்தினர், கிராம மக்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
இதில் பங்கேற்ற விவசாயிகள், "எங்களது கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்த கட்டமாக பல்வேறு போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளோம்" என்று தெரிவித்தனர்.