village assistants begging protest in Thanjavur

தஞ்சாவூர்

தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூரில் பிச்சை எடுத்து போராட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தஞ்சாவூர் மாவட்டம், பனகல் கட்டிடம் முன்பு பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பரஞ்ஜோதி, கருணாநிதி, அண்ணாமலை, அடைக்கலம், புனிதவள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், "புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 

இளைஞர்களின் வேலை வாய்ப்பை தட்டிப்பறிக்கும் அரசாணை 56-ன் படி அமைக்கப்பட்ட பணியாளர் சீரமைப்பு குழுவினை கலைத்திட வேண்டும்" என்று முழங்கினர். 

இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நெற்றியில் பட்டை நாமம் போட்டு கொண்டும், கைகளில் தட்டு ஏந்தி கொண்டு அருகில் உள்ள கடைகளிலும், அந்தவழியாக நடந்து சென்ற பொதுமக்களிடமும் பிச்சை எடுத்து போராடினர்.