நடிகர் விஜய் தனது "உங்கள் விஜய், நான் வரேன்" சுற்றுப்பயணத்தின்  நாகை மாவட்டத்திற்கு சென்றுள்ளார். அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் பேசிய அவர், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து மத்திய, மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்தார்.

Vijay speech on fishermen issue : தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் மக்களை சந்திக்க தொகுதி தொகுதியாக புறப்பட்டுள்ளது. அந்த வகையில் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் தனது இலக்கு என அறிவித்த விஜய், தனது கடைசி படமான ஜனநாயகன் பட சூட்டிங்கை முடித்துவிட்டு மக்களை சந்திக்க புறப்பட்டுள்ளார். மாநிலளாவிய பிரச்சாரத்தை செப்டம்பர் 13, 2025 அன்று திருச்சியில் தொடங்கினார். "உங்கள் விஜய், நான் வரேன்" என்ற மக்கள் நோக்கிய சுற்றுப்பயணம் என்று அழைக்கப்படும் இந்தப் பிரச்சாரம், வருகிற டிசம்பர் 20 வரை ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் நடைபெறவுள்ளது.

நாகையில் கெத்து காட்டும் விஜய்

அந்த வகையில் திருச்சி மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் தவெக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விஜய் பேசினார். இதனையடுத்து இன்று டெல்டா மாவட்டங்களை குறிவைத்த விஜய் நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் பேசவுள்ளார். இதற்காக இன்று காலை தனி விமானம் மூலம் திருச்சி வந்த விஜய் அங்கிருந்து 145 கிலோ மீட்டர் காரில் பயணம் செய்து நாகை பகுதிக்கு வந்தடைந்தார். இதனையடுத்து அங்கு கூடியிருந்த தவெக தொண்டர்கள் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். 3 கிலோ மீட்டர் தூரத்தை அடைய 2 மணி நேரத்திற்கு மேலாக ஆனது. காலை 11.30 மணிக்கு நாகை புத்தூர் ரவுண்டானா அருகே பேச விஜய் அனுமதி கேட்டிருந்த நிலையில், அந்த இடத்தை அடைய மதியம் 1.30 மணியானது.

இதனையடுத்து விஜய் தொண்டர்கள் மத்தியில் உற்சாகமாக பேச ஆரம்பித்தார். தமிழக மீனவர்களுக்காகவும், இலங்கை தமிழர்களுக்காவும் பேசிய அவர், மற்ற இடங்களில் மீனவர்கள் தாக்கப்பட்டால் இந்திய மீனவர்கள் எனவும், தமிழகத்தில் தாக்கப்பட்டால் தமிழக மீனவர்கள் என மத்திய பாஜக அரசு பிரித்து பார்ப்பதாக கூறிய அவர் திமுக அரசு கடிதம் எழுதுவதோடு தங்கள் பணி முடிவடைந்து விட்டதாக நினைப்பதாகவும் விமர்சித்தார். 

மீனவர்களுகாக குரல் கொடுப்பது புதிது இல்லையெனவும் ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நாகையில் கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசியவர் கடந்தமுறை பெரம்பலூரில் மக்களை சந்திக்க திட்டமிட்ட நிலையில், சந்திக்க முடியவில்லையென தெரிவித்தவர், இதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக கூறினார். அடுத்த முறை கண்டிப்பாக பெரம்பலூர் வருவேன் என விஜய் உறுதி அளித்தார்.